Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம்
ஆறாம் பகுதி /படலங்கள் 33-39

irAmAyaNam of kampar
canto 6 (yutta kAnTam), part 6
(paTalams 33-39, verses 9758 - 10534)
In tamil script, unicode/utf-8 format



    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
    providing us with a romanized transliterated version of this work and for permissions
    to publish the equivalent Tamil script version, edited to conform to Annamalai University edition.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2017.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are :
    http://www.projectmadurai.org/


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி 5) /படலங்கள் 26-32

6.33 இராவணன் களம் காண் படலம் 9758 – 9784 (27)
6.34 இராவணன் தேர் ஏறு படலம் 9785 – 9825 (41)
6.35 இராமன் தேர் ஏறு படலம் 9826 – 9846 (21)
6.36 இராவணன் வதைப் படலம் 9847 – 10097 (251)
6.37 மீட்சிப் படலம் 10098 – 10454 (357)
6.38 திரு முடி சூட்டுப் படலம் 10455 – 10496 (42
6.39 விடை கொடுத்த படலம் 10497 -10534 (38)

-------------

6.33 இராவணன் களம் காண் படலம் 9758 – 9784 (27)

இலங்கை எய்திய இராவணன் வெற்றி பெற்றதனால் மகிழ்ந்திருத்தல்

அலக்கண் எய்தி அமரர் அழிந்திட
உலக்க வானர வீரரை ஓட்டி அவ்
இலக்குவன்தனை வீட்டி இராவணன்
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே. 6.33.1

போரில் வருந்தினர்க்கு விருந்து அமைக்க இராவணன் விரும்புதல்

பொருந்து பொன்பெருங் கோயிலுள் போர்த்தொழில்
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 6.33.2

வான நாட்டை வருக என வல்விரைந்து
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;
‘ஆன நாட்டு அரும் போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் ‘என்றான். 6.33.3

போகப் பொருள்கள் வந்து சேர்தல்
நறவும் ஊனும் நவை அற நல்லன
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்த்
திறமும் நானப் புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். 6.33.4

போகப் பொருள்களை அமைக்க வான் அரமகளிர் வருதல்

நான நெய் நன்கு உரைத்து நறும்புனல்
ஆன கோது அற ஆட்டி அமுது ஒடு
பானம் ஊட்டி சயனம் பரப்புவான்
வான நாட்டியர் யாவரும் வந்தனர். 6.33.5

அரக்கரின் நுகர்ச்சி (9761-9762)

பாடுவார்கள்; பயில்நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்முதல் யாரும் குறைவு அறத்
தேடினார் என பண்ணையில் சேர்ந்தனர். 6.33.6

அரைசர் ஆதி அடியவர் அந்தமா
வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்
விரைவின் இந்திர போகம் விளைதரக்
கரையிலாத பெருவளம் கண்ணினார். 6.33.7

தூதுவர் வந்து வணங்குதல்

இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்
அன்ன சேனை களப்பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார். 6.33.8

தூதுவரின் அச்ச நிலை

நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார்
பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார். 6.33.9

தூதர் சொன்னது (9765-9766)

‘இன்று யார் விருந்து இங்கு உண்பார்? இகல் முகத்து இமையோர் தந்த
வென்றியாய்! ஏவச் சென்ற ஆயிர வெள்ளச்சேனை
நின்றது புறத்தது ஆக, இராமன்கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால் இரண்டு, மூன்று கடிகையில் உலர்ந்தது ‘என்றார். 6.33.10

‘வலிக்கடன் வான் உேளாரைக் கொண்டு, நீவகுத்த போகம்,
“கலிக்கடன் அளிப்பல் “ என்று நிருதர்க்குக் கருதினாயேல்,
பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது, உன்குலத்தின் பாலோர்
ஒலிக்கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளமே உள்ளார். 6.33.11

இராவணன் திகைத்தல்

ஈட்டரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம்
கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழிவும் கிட்டி
ஊட்டு அரக்கு அனைய செங்கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்க
தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன். 6.33.12

இராவணன் தூதுவர் சொல்லை ஐயுறுதல்

என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்
உன்னினும் உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மிக்கார்;
“பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் “ என்று பேசும்
இந்நிலை பொய்ம்மை; மெய்ம்மை விளம்புவீர் விரைவின் என்றான்! 6.33.13

மாலியவான், தூதர் பொய்யுரையார் எனல்

கேட்டு அயல் இருந்த மாலி, ஈது ஒரு கிழமைத்து ஆமோ?
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்? ‘என்றான் 6.33.14

மாலியவான் மேலும் கூறுதல் (9770-9772)

“அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து அழிக்கின்றான்தன்
உளப் பெரும் தகைமை தன்னால் ஒருவன் ‘‘ என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே? அரவின்மேல் கிடந்து, மேல்நாள்,
முளைத்த போர் இராமன் ‘‘ என்று வீடணன் மொழி பொய்த்து ஆமோ? 6.33.15

‘ஒன்று இடில் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கும் நெருப்பும் காண்டும்;
குன்றொடு மரமும், புல்லும். பல்லுயிர்க் குழுவுங் கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ? 6.33.16

‘பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம் பற்று
விட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும் இல்லை;
கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்;
சிட்டது செய்தி ‘என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான். 6.33.17

மாலியவானுக்கு இராவணன் மறுமொழி

‘இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்;
அலக்கண் இல் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனைக் கண்டால்,
உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப்பொறை உகவான்; உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது என்றான். 6.33.18

இலக்குவன் உயிர் பெற்றதைத் தூதுவர் உணர்த்துதல்

ஆண்டு அது கேட்டு நின்ற தூதுவர், ‘ஐய! மெய்யே
மீண்டது, அவ் இளவல் ஆவி, மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும் தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப்
பூண்டனர் தழுவிப் புக்கார் காணுதி போதி ‘என்றார். 6.33.19

இராவணன் கோபுரத்தில் ஏறிப் போர்க்களத்தைக் காணுதல்

தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,
ஏறினன், கனகத்து ஆன கோபுரத்து உம்பர் எய்தி,
ஊறின சேனை வெள்ளம் உலந்தபேர் உண்மை எல்லாம்,
காறின உள்ளம் நோவ, கண்களால் தரெியக் கண்டான். 6.33.20

தலையொடு முடியும் அரக்கியரின் அழுகை ஒலியை இராவணன் கேட்டல்

கொய்தலைப் பூசற் பட்டோர் குலத்தியர் குவளையோடு
நெய்தலை வென்றவாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட
கய்தலை உற்ற பூசல்; கடல் எலாம் நிமிருங் காலைச்
செய்தலை உற்ற ஓசைச் செயலது செவியில் கேட்டான். 6.33.21

எண்ணுநீர் கடந்த யானைப் பெரும்பிணம் ஏந்தி, யாணர்
மண்ணின்நீர் அளவும் கல்லி, நெடுமலை மறித்து, மண்டும்
புண்ணின்நீர் ஆறும், பல்பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல்,
கண்ணின்நீர் ஆறும் மாறாக் கருங்கடல் மழுப்பக் கண்டான். 6.33.22

‘முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவி
பெற்று இயல் பெற்றி பெற்றாம் ‘ என்ன வாள் அரக்கர் யாக்கை,
சிறு இயல் குறுங்கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல்பேய்
கற்று இயல் பாணி கொட்டக், களிநடம் பயிலக் கண்டான். 6.33.23

குமிழி நீரோடும், சோரி, கனலொடும், கொழிக்கும் கண்ணான்,
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழக்கிற் சாய்ந்தார்.
அமிழ்பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய் முகத்தில் தேக்கி,
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான். 6.33.24

விண்களில் சென்ற வன்தோள் கணவரை, அலகை வெய்ய
புண்களில் கைகள் நீட்டி, புதுநிணம் கவர்வ நோக்கி,
மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக்
கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 6.33.25

இராவணன் கோபுரத்திலிருந்து இறங்குதல்

விண் பிளந்து ஒல்க ஆர்க்கும் வானரர் வீக்கம் கண்டான்;
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்;
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்
புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான். 6.33.26

இராவணன் சினக் குறிப்புடன் அரசவை அடைதல்

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடைவாய் நக்கப்
புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன்,
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெஞ்சினத் தீமேல் வீங்கி
சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான். 6.33.27
-------------

6.34 இராவணன் தேர் ஏறு படலம் 9785 – 9825 (41)

எஞ்சியுள்ள சேனையைத் திரண்டு எழுமாறு முரசு அறையச் செய்க ‘என இராவணன் மகோதரனை நோக்கிக் கூறுதல்

பூதரம் அனைய மேனி, புகைநிறப் புருவச் செங்கண்
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
“ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக! ‘என்று ஆனை மணிமுரசு எற்றுக! ‘‘ என்றான். 6.34.1

போர்முரசுகேட்டு அரக்கர்சேனை திரளுதல்

எற்றிய முரசங் கேளா, ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும், துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக. 6.34.2

இராவணன் சிவபூசைசெய்து தானம் முதலியன நல்குதல்

ஈசனை, இமையா முக்கண் ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த்தொழிற்கு அமைவது ஆனான் 6.34.3

இராவணன் போர்க்கோலம் கொள்ளுதல்

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன்கவசமும், சேர்த்தான். 6.34.4

வாள் வலம்பட, மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தனவாம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடிசூத்திரம் வீக்கி; 6.34.5

மறை விரித்து என, ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தனெ, கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6.34.6

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழைத்து எடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி; 6.34.7

உரும் இடித்தபோது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலம் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய்நலம் சாய்வுறச் சாத்தி; 6.34.8

நால் அஞ்சு ஆகிய கரங்களின் நனந்தலை அனந்தன்
ஆலம்சார் மிடற்று அருங் கறை கிடந்து என, அலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ 6.34.9

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க,
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்த்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 6.34.10

உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோெளாடு தோள் இடை தொடர,
புதை இருள்பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்து இனம் திகழ; 6.34.11

வேலைவாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றுளர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாள் இடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 6.34.12

பகுத்த பல்வளக் குன்றினில முழை அன்ன பகுவாய்
வகுத்த வான்கடை கடைதொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீலவான் மேகம்சூழ் விசும்பிடை, தசும்பு ஊடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க. 6.34.13

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஓதம்
தத்துகின்றன, வீரபட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண்திசை மும்மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 6.34.14

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணிமுடித் தலங்கள்,
உலகம் ஒன்றினை விளக்குறு கதிரினை ஓட்டி
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 6.34.15

நாகம், நால் நிலம், நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன்பு அணிந்த
வாகை மாலையின் மருங்கு உற வரி வண்டொடு அளவித்
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூடி; 6.34.16

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதி செல்லாத
புகழ் எனச் சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 6.34.17

வருக தேர் ‘என இராவணன் கூறத் தேர் வருதல்

‘வருக, தேர்! ‘என வந்தது வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 6.34.18

தேரின் சிறப்பியல்புகள்

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர்நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன்காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும், பூண்டது நலத்தால். 6.34.19

பாரில் செல்வது, விசும்பிடைப் படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும் செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும் செல்வது, ஓர் இமைப்பின். 6.34.20

எண்திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தனெ வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசு இனம் குயிற்றியது, அடங்க. 6.34.21

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் அன்னவர் ஈந்தவும், இகலில் இட்டனவும்,
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 6.34.22

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அரும் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது; வென்றியின் உறையுள். 6.34.23

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
எனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல்நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங்கொடை அருங் கடன் நேர்ந்தான். 6.34.24

இராவணன் தேரில் ஏறுதல்

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை, மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 6.34.25

இராவணன் கூறிய வஞ்சினம்

‘மன்றல் அம்குழல் சனகி தன் மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின் ‘என்றான். 6.34.26

போருக்கு எழுந்த இராவணனது தோற்றப் பொலிவு

பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 6.34.27

இராவணன் தன் தோள்களைத்தட்டி ஆரவாரித்தல்

விசும்பு விண்டு இரு கூறு உற, குலம் வரை வெடிப்ப,
பசும் புண் விண்டு என புவிபட, பகலவன் பசும் பொன்
தசும்பு நிள்று இடைந்து இரிந்திட, மதிதகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 6.34.28

இராவணன் தன் வில் நாணைத்தறெித்தல்

‘நணித்து வெஞ் சமம் ‘என்பது ஓர் உவகையின் நலத்தால்
திணித் தடம் கிரி வெடித்து உக, சிலையை நாண் தறெித்தான்;
மணிக் கொடுங்குழை வானவர் தானவர் மகளிர்,
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 6.34.29

உயிர்கள் யாவும் நடுங்க இராவணன் போர்க்களத்திலே தோன்றுதல்

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கம் உற்று இரிய,
‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன் மீது ‘ எனப் பொலி மெய்யான் 6.34.30

தோன்றினான் வந்து சுரர்கேளாடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
‘ஊன்றினான் செரு ‘என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இருமடி கனல. 6.34.31

அப்பொழுது உலகில் தோன்றிய கலக்கத்தைக்கண்டு சுக்கிரீவன் முதலியோர் துணுக்குற்றெழுதல்

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் மறுகுறும் மறுக்கும்,
அலைகொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 6.34.32

‘பீறிற்றாம் அண்டம் ‘என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்ட ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
‘மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னை கொலோ? ‘ என எழுந்தார். 6.34.33

இராவணன் தேர்மீதேறிச் சேனையொடு வருகின்றான் என்பதைச் சுக்கிரீவன் முதலியோர் அறிதல்

கடல்கள் யாவையும், கன மலைக் குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதுங் கண்டார். 6.34.34

இராவணன் வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்

‘எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்! அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர் ‘என்றனன், வீடணன், விரைவான். 6.34.35

இராமன் போருக்கு எழுதல்

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி ‘அஞ்சல் ‘என அந்நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 6.34.36

இராமன் போர்க்கோலங் கொள்ளுதல்

கடக் களிறு எனத்தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு, இன்று ‘என இசைத்தான். 6.34.37

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்ன கவசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன் அக வசத்து உற வரிந்தது எனின், மாதோ!
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனல் ஆமால். 6.34.38

புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனல் ஆய மலர் அங்கையின் இலங்கக்
கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி
வட்டில் புறம் வைத்து அயல் வயங்கு உற வரிந்தான். 6.34.39

சிவபெருமான் தேவர்களைநோக்கி இராமனுக்குத் தேரனுப்புமாறு பணித்தல்

‘மூண்டசெரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘ என்று அரன் இசைத்தான். 6.34.40

இந்திரன், இராமனுக்கு உதவக்கருதித் தேரைக் கொணருமாறு மாதலிக்குக் கட்டளையிடுதல்

தேவர் அதுகேட்டு, ‘இது செயற்கு உரியது ‘என்றார்;
ஏவல் புரி இந்திரனும் அத் தொழில் இசைந்தான்,
‘மூவுலகும் இன்று ஒரு கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு தேர் கொணர்தி ‘என்றான். 6.34.41
------------

6.35 இராமன் தேர் ஏறு படலம் 9826 – 9846 (21)

மாதலி தேர் கொணர்தல்

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;
சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் எனநின்றது பரந்தது விசும்பின். 6.35.1

வந்த தேரின் சிறப்பியல்புகள்

குலக் கிரிகள் ஏழின் வலிகொண்டு உயர்கொடிஞ்சும்,
அலக்கும், உயர்பாரும், வலி ஆழியும், நல் அச்சும்
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 6.35.2

ஆண்டினொடு நாள் இருது திங்களிவை என்னா
மீண்டனவும் மேலனவும் ஈட்டி விரிதட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப்பொரு இல் கோவை
நீண்ட புனைதாரின் அது; நின்றுளது குன்றின். 6.35.3

மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆகக்
கோது அற வகுத்தது; மழைக்குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப்
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 6.35.4

மரத்தொடு மருந்து உலகில் யாவும் உளவாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல்மீது நிமிர்காலத்து
உரத்தொடு தொகுத்த கதழ் ஓசை அதன் ஓதை. 6.35.5

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டவை வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின். 6.35.6

வேதம் ஒரு நாலும், நிறைவேள்விகளும், வெவ்வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரிமூன்றும், நனி பொய் தீர்
மாதவமும், ஆவுதியும், ஐம்புலனும், மற்றும்; 6.35.7

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு குணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை, பிணிக்கும்
பொரும் பரிகள் ஆகி நனி பூண்டது, பொலந்தேர். 6.35.8

தங்களுக்குப் போரில் வெற்றி தேடித்தரும்படித் தேவர்கள் அத்தேரை வேண்டுதல்

வந்ததனை வானவர் வணங்கி, ‘வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி ‘என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி நனி சென்றான். 6.35.9

தேர் இராமனருகே விரைந்து வருதல்

‘வினைப்பகை விசைக்கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசைபெற்றுளது வந்தது ‘என வானோடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பின் பட நிமிர்ந்து உயர் நெடுந்தேர். 6.35.10

தேரினைக் கண்டு இராமன் வியத்தல்

‘அலரி தனி ஆழி புனை தேர் இது எனின், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிது அம்மா!
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இது தானோ? 6.35.11

இராமன், தேர்ப்பாகனாகிய மாதலியை நோக்கி வினவுதல்

‘என்னை இது நம்மை இடை எய்தல்? ‘என எண்ணா,
மன்னவர்தம் மன்னன்மகன், மாதலியை, ‘வந்தாய்,
பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு, ஆர்புகல? ‘என்றான்;
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான். 6.35.12

மாதலியின் மறுமொழி

‘முப்புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்
அப்பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி காலும் உலைவு இல்லா
இப்பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய்! 6.35.13

‘அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டுபெயரும்; குறுகும்; நீளும்; அவை கோள் உற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின்சரம் எனக்கடிது போமால். 6.35.14

‘கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால் உணர்வு பின்படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே
எண்ணும் நெடுநீரினும், நெருப்பிடையும் எந்தாய்! 6.35.15

‘நீரும் உளவே, அவை ஓர் ஏழு; நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி; அவை பண்பின்
பேரும் ஒருகாலை, ஒருகாலும் இடைபேராத்
தேரும் உளதே, இது அலால்? உலகு செய்தோய்! 6.35.16

‘தேவரும், முனித்தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூவுலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று!
ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்து உளது இது ‘என்னா,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 6.35.17

இத்தேர் அரக்கர் மாயையால் தோன்றியதோ ‘என இராமன் ஐயுற, தேர்க்குதிரைகள் அந்த ஐயத்தைப்போக்குதல்

ஐயன் இதுகேட்டு, ‘இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கை கொல்? ‘எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;
‘மெய் அவன் உரைத்தது ‘என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப்பரி மொழிந்த, முது வேதம். 6.35.18

தெளிவுபெற்ற இராமன் மாதலியை நோக்கி ‘உனது பெயரைக் கூறுக ‘என அவன் தன் பெயரைக் கூறுதல்

‘இல்லை இனி ஐயம் ‘என எண்ணிய இராமன்,
நல்லவனை, ‘நீ உனது நாமம் நவில்க! ‘என்ன,
‘வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப்பேர்
சொல்லுவர் ‘எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 6.35.19

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி,
‘நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் ‘என, நின்றான்
ஆரியன்; வணங்கி அவர், ‘ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது ‘ என்றனர், தெளிந்தார். 6.35.20

இராமன் தேரில் ஏறுதல்

விழுந்து புரள் தீவினை குலத்தோடும் வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கைமுந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் இராமன். 6.35.21
-------------

6.36 இராவணன் வதைப் படலம் 9847 – 10097 (251)

ஆழி அம் தடந்தேர், வீரன் ஏறலும், அமலச் சில்லி
பூழியிற் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோள் என்று ஏத்தினார் மலர்கள் தூவி. 6.36.1

தேவர்கள் வாழ்த்த இராமன் தேர் செல்வது

‘எழுக தேர்; சுமக்க எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார் ‘என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 6.36.2

இராவணன் தன்தேரை இராமனுக்கு எதிரே செலுத்துமாறு பாகனுக்குக் கூறுதல்

அன்னது கண்ணில் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர் ‘என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், ‘அதுகிடக்க ‘என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை
மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் விடுதி ‘என்றான். 6.36.3

அஞ்சிய வானரரும் அஞ்சாது ஆரவாரித்துப் பொருதல்

இரிந்த வானரங்கள் எல்லாம், ‘இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் ‘என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; ‘திசையோடு அண்டம்
பிரிந்தன கொல்! ‘என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 6.36.4

பலவகை ஆரவாரங்கள்

வார்ப்பொலி முரசின் ஓதை, வயவர் வாய் புடைப்பின் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார்வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க, செவிமுற்றும் செவிடு செய்ய. 6.36.5

இராமன் மாதலிக்குச் சில அறிவுரை பகர்தல்

மாதலி வதனம் நோக்கி, மன்னர்தம் மன்னன் மைந்தன்,
“காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதிலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என்தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிக்கலை ‘‘ என்னச் சொன்னான். 6.36.6

மாதலி அவ்வாறு செய்வேன் எனல்

‘வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார் தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதி தானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தெள்ளிது என் விஞ்சை! ‘என்றான்; அமலனும் ‘செவ்விது! ‘என்றான். 6.36.7

இராம இராவணர்க்குப் போர்மூள மகோதரன் விடைபெறுதல்

‘தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர்மேல்;
ஏன்று இருவோர்க்கும் வெம்போர் எய்தியது; இடையே யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு ‘என்றான்;
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 6.36.8

இலக்குவனோடு பொருமாறு மகோதரனை ஏவுதல்

‘அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம் ‘என்றான்;
வெம்பு இகல் அரக்கன், ‘அஃதே செய்வென் ‘என்று, அவனின் மீண்டான். 6.36.9

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தயெ்வத் திண்தேர் அணுகியது; அணுகுங் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத்
தூண்டுதி தேரை ‘என்றான்; சாரதி தொழுது சொல்வான். 6.36.10

சாரதி அப்பாற்சேறலே கருமம் எனல்

‘எண் அரும் கோடி வெங்கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல்தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப்பால் போதலே கருமம் ‘என்றான். 6.36.11

மகோதரன் இராமனொடு பொருதல் (9856-9858)

என்றலும், எயிற்றுப் பேழ்வாய் மடித்து, ‘அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி ‘என, சீற்றம் சிந்தும்
குன்று அன தோற்றத்தான்தன் கொடி நெடுந் தேரின் நேரே
சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது திமிலத் திண்போர். 6.36.12

பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு வாள் கைக்
கல் தடந் திண்தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின, இராமன் வாளி வட அனல் பருக; வன்தாள்
ஒற்றை வன்தடந் தேரோடும் மகோதரன் ஒருவன் சென்றான். 6.36.13

அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 6.36.14

இராமன் மகோதரனைச் சிதைத்தது

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறல் உடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் தாளும் ஒன்று ஒன்றால், கழுத்தும் ஒன்றால்,
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினன்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி. 6.36.15

மகோதரன் மாண்டதை அறிந்து இராவணன் இராமனோடு போர்செய்ய விரைதல்

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகு முற்றும்
மாதிரத்தோடும் வென்ற வன்தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; ‘செலவிடு, செலவிடு! ‘என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரகத் திண்தேர். 6.36.16

இராவணனது சேனையை இராமன் அழித்தல்

பனிப்படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகில் உள்ளம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனிப்படா நின்ற வீரன், அவன் ஒன்றும் நோக்கா வண்ணம்
குனிப்படா நின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 6.36.17

இராவணனுக்கு இடத்தோள்கள் துடித்தல்

அடல்வலி அரக்கற்கு அப்போது, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, எற்றிக் கால் கிளர்ந்து உடற்றுங் காலை,
வடவரை முதல ஆன மலைக்குலம் சலிப்ப மான,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் தோள். 6.36.18

தீ நிமித்தங்கள் (9863-9865)

உதிர மாரி சொரிந்தது உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அருவரை
பிதிர வீழ்ந்தது அசனி; ஒளிபெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 6.36.19

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கல் இல்
ஏவும் வெஞ்சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள் மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 6.36.20

எழுது வீணை கொடு ஏந்து பதாகைமேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன சூழிமா. 6.36.21

இராவணன் இத் துன்னிமித்தங்களை மதியாமை

இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய்
துன் நிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்
அன்னது ஒன்றும் அறிந்திலன், ‘ஆற்றுமோ,
என்னை வெல்ல மனித்தன்? ‘என்று எண்ணுவான். 6.36.22

இராவணன் தேர்வர வானரர் இருபாலும் ஒதுங்கி ஓடுதல்

வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறித் தாம்
நீங்கினார் இருபாலும் நெருங்கினார். 6.36.23

இராமனும் இராவணனும் எதிர்க்கும் தோற்றம் (9868-9871)

கருமமும் கடைக்கண் உறும் ஞானமும்
அருமை சேரும் அறிவும் அவிச்சையும்
பெருமைசால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினார். 6.36.24

சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்
பொர எதிர்ந்தனர் போலப் பொலிந்தனர்;
இரவும் நண்பகல் என்னவும் ஆயினார். 6.36.25

வென்றி அம்திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர்
அன்றியும் நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 6.36.26

துவன வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்
எவன வில் வலி? என்று இமையோர் தொழ,
புவன மூன்றும் பொலங்கழலால் தொடும்
அவனும் அச்சிவனும் எனல் ஆயினார். 6.36.27

இராவணன் சங்கினை ஊதுதல்

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க தொல் அண்டம் வெடிபட
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 6.36.28

இராமனது சங்கு தானே முழங்குதல்

சொன்ன சங்கினது ஓசை துளங்குற
‘என்ன சங்கு? ‘என்று இமையவர் ஏங்குற
அன்ன சங்கைப் பொறாமையின் ஆரியன்
தன்னவெண் சங்கு தானும் முழங்கிற்றால். 6.36.29

இராமன் அறியாதபடி ஐம்படையும் அருகில் நின்றமை

அய்யன் ஐம்படைதாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரின்
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள்
பொய்யில் தன்னைப் புலன் தரெியாமைபோல். 6.36.30

மாதலியின் சங்கமுழக்கம்

ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க குலம் கொள்தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 6.36.31

தேவமாதர் இராமனைக் காணுதல்

துமில வாளி அரக்கன் துரப்பன
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே
கமல வானக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 6.36.32

இரு தேர்களிலும் பூட்டிய குதிரைகள் சினந்து நோக்குதல்

சென்ற தேரோர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங்கண் குதிரை குதிப்பன
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன. 6.36.33

இரு தேர்க்கொடிகளிலுள்ள இடியும் வீணையும் முழங்குதல்

கொடியின்மேல் உறை வீணையும் கொற்ற மா
இடியின் ஏறும் முறையின் இடித்தன
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஓர் மூரி முழக்கின. 6.36.34

இருவருடைய வில் ஒலி

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்த என்னல் ஆம்
வீழி வெங்கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி மாமழை ஒத்ததால். 6.36.35

வானர வீரர்களின் திகைப்பு

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ்சின வீரர் விழித்தனர்
ஏங்குகின்றது அல்லால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 6.36.36

தேவர்களின் திகைப்பு

‘ஆவது என்னை கொலாம்? ‘ என்று அறிகிலர்,
‘ஏவர் வெல்வர்? ‘என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 6.36.37

இராமனது தோளின் பூரிப்பைக்கண்டு அமரர் மலர்மழை சொரிதல்

சேண வந்து அமர் நோக்கும் செழும்புயம்
பூண் அழுந்தின; சிந்தின பூமழை
காண வந்த கடவுளர் கை எலாம்
ஆண் அவன் துணை ஆருளர் ஆகுவார். 6.36.38

கவிக்கூற்று: இருவர்தம் வில்லின் தோற்றம்

நீண்ட மின்னொடு வான் இடு நீலவில்
பூண்டு இரண்டு எதிர் நின்றன போன்றன
ஆண்ட வில்லிதன் வில்லும் அரக்கன்தன்
தீண்ட வல்லவர் இல்லாச் சிலையுமே. 6.36.39

இராவணனது படைக்கலங்களின் ஒளி
இக்கணத்தும் எறிப்ப தடித்து என;
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு அன
பக்கம் வீசு படை சுடர் பல்திசைப்
புக்குப் போக பொடிப்பன போக்கு இல. 6.36.40

இராவணன் ஆர்ப்பும் வில்லின் முழக்கும்

அரக்கன் அன்று எடுத்து ஆர்த்தன ஆர்ப்பும், பேர்
சிரிப்பும், வில்லின் தழெிப்பும் உண்டே கொலாம்
குரைக்கும் வேலையும், மேகக் குழாங்களும்,
இரைத்து இடிக்கின்றது, இன்றும் ஓர் ஈறு இல 6.36.41

இராவணனது கண்ணில் சிந்தின சினத் தீ

மண்ணில் செல்வன செல் இனும் மாசு அற
எண்ணில் சூல் மழை அல்ல; இராவணன்
கண்ணில் சிந்தின தீ கடு வேகத்த
விண்ணிற் செல்வன மீண்டு இன்று வீழ்வன. 6.36.42

இராமன் சிரிப்பு

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும் நாவொடு
கால் கலங்குவர் தேவர்; கண மழை
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 6.36.43

இராவணன் வீரப் பேச்சு வில்லின் பெருமை

‘குற்றம் வில்கொடு கொல்லுதல்; கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி படியின்மேல்
எற்றுவேன் ‘என்று உரைக்கும்; இரைக்குமால். 6.36.44

கணையின் பெருமை

‘தடித்து வைத்து அன்ன வெங்கணை தாவு அற
வடித்து வைத்தது மானுடற்கே? வலி
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென் சிறை ‘எனப் பேசுமால். 6.36.45

இராவணன் அம்பு எய்தல்

பதைக்கின்றது ஒர்மனமும், இடை படர்கின்றது ஓர் சினமும்,
விதைக்கின்றன பொறிபொங்கின விழியும், உடைவெய்யோன்,
குதைக்குன்று என நிமிர்வெஞ்சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர்வெங்கணை, உரும் ஏறு என எய்தான். 6.36.46

அம்பின் தன்மைகள்

உரும் ஒத்தன, அனல் ஒத்தன, ஊற்றம்தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன, மழை ஒத்தன, வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வு உற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறைசுற்றிய பெரும்பாம்பினும் பெரிய. 6.36.47

இராவணன் எய்த அம்புகளை இராமன் அழித்தல்

‘துண்டப்பட நெடு மேருவைத் துளைத்து, உள் இறை தொங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும் ‘என்று இமையோர்களும் அயிர்த்தார்;
கண்டத் தறெு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான். 6.36.48

இராவணன் மீண்டும் அம்பு சொரிதல்

உடையான் முயன்ற ஒருகாரியம் உறுதீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கு எனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறின கணைமாரிகள் தொகை தீர்ந்தன துரந்தான்
கடை ஊறு உறு கணமாமழை கால் வீழ்த்து எனக் கடியான். 6.36.49

இராவணன் விட்ட அம்புகளின் நிலை

விண்போர்த்தன; திசை போர்த்தன; மலைபோர்த்தன; இமையோர்
கண்போர்த்தன; கடல் போர்த்தன; படிபோர்த்தன; கலையோர்
எண்போர்த்தன; எரிபோர்த்தன; இருள்போர்த்தன; ‘என்னே
திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 6.36.50

இராவணன் அம்பினால் வானரசேனை அழிவதுகண்டு இராமன் அவ்வம்புகளை விலக்குதல்

அல்லா நெடும் பெருந்தேவரும் மறைவாணரும் அஞ்சி,
எல்லாரும் தம் கரங்கொண்டு இரு விழிபொத்தினர், இரிந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அதுகண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான். 6.36.51

இராமன் எய்த அம்பினால் இராவணன் அம்புகள் அழிதல்

செந்தீவினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள்
முந்து ஈந்தது ஒர் உணவின்பயன் எனல் ஆயின, முதல்வன்
வந்து ஈந்தன வடி வெம் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெம் தீ இனை பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 6.36.52

இராமனும் இராவணனும் ஒத்துப் பொருதல் (9897-9901)

நூறு ஆயிரம் வடிவெங்கணை நொடி ஒன்றினில் விடுவான்,
ஆறா விறல் மறவோன், அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்தின, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 6.36.53

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம்போர்
வல்லான், மழு, எழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை
தொல் ஆர் அயில், வாள், சக்கரம் சூலம், இவை தொடக்கத்த
எல்லா நெடுங்கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான். 6.36.54

வேலாயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒருகோல்படக் குறைவ
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூலாயின் மழை அன்னவன், தொடை பல்வகை தொடுக்க. 6.36.55

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின்தலை உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகிலாத்
தொத்துப்பட நெடும் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்
குத்துக்கொடு நெடுங்கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான். 6.36.56

ஈசன்விடு சரம் மாரியும் எரிசிந்துறு தறுகண்
நீசன்விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம்பூதமும் செறிவுற்றன செருவில்
கூசிம்மயிர் பொடிப்பு உற்றன எனலாயின குலைய. 6.36.57

இராவணனது தேர் விண்ணில் எழுதல்

மந்தரக் கிரி என மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என புரங்கள்தாம் என
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டு என
அத்தரத்து எழுந்தது அவ் அரக்கன் தேர் அரோ. 6.36.58

இராமன் காண வானரசேனை அழிதல்

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சரமழை உருவிப் போதலால்
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லெனக்
கழிந்தது கவிக்குலம் இராமன் காணவே. 6.36.59

இராமன் தேரை விண்மிசைவிடுமாறு மாதலிக்குச் சொல்லுதல்

‘முழவு இடு தோெளாடு முடிகொள் பல்தலை
விழவிடுவேன் இனி; விசும்பு சேமமோ?
மழவிடை அனைய நம் படைஞர் மாண்டனர்
எழவிடு தேரை ‘என்று இராமன் கூறினான். 6.36.60

மாதலி தேரை விண்ணில் செலுத்துவது

‘அந்து செய்குவென் ‘என அறிந்த மாதலி
உந்தினன் தேரெனும் ஊழிக்காற்றினை;
இந்து மண்டலத்தின்மேல் இரவி மண்டலம்
வந்தனெ வந்தது அம் மானத்தேர் அரோ. 6.36.61

இரிந்தன மழைக்குலம் இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக்குலம் உதிர்ந்து சிந்தின;
நெரிந்தன நெடுவரைக் குடுமி; நேர்முறை
திரிந்தன சாரிகை தேரும் தேருமே. 6.36.62

சாரிகையின் விளைவு

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்
அலம்வரும்; குலவரை அனைத்தும் அண்டமும்
சலம்வரும் குலால்மகன் திகிரித் தன்மைபோல். 6.36.63

சாரிகையின் விரைவு (9908-9913)

‘எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன்தேர் இது ‘என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தரெிவு தந்திலர்,
பிழம்பின திரிவன என்னும் பெற்றியார். 6.36.64

உக்கு இலா உடுக்களும் உருள்கள் தாக்கலின்
நெக்கு இலா மலைகளும் நெருப்புச் சிந்தலின்
வக்கு இலா திசைகளும் உதிரம் வாய்வழிக்
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன. 6.36.65

‘இந்திரன் உலகத்தார் ‘என்பர்; என்றவர்
‘சந்திரன் உலகத்தார் ‘என்பர்; ‘தாமரை
அந்தணன் உலகத்தார் ‘என்பர்; ‘அல்லரால்
மந்தர மலையினார் ‘என்பர் வானவர். 6.36.66

‘பாற்கடல் நடுவணார் ‘என்பர்; ‘பல்வகை
மால்கடலினுக்கும் அவ் வரம்பினார் ‘என்பர்;
‘மேல்கடலார் ‘என்பர்; ‘கிழக்கு உளார் ‘என்பர்;
‘ஆர்ப்பு இடை அது ‘என்பர் அறியும் வானவர். 6.36.67

‘மீண்டனவோ? ‘என்பர்; ‘விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ? ‘என்பர்; ‘கீழவோ? என்பர்;
‘பூண்டன புரவியோ? புதிய காற்று! ‘என்பர்
‘மாண்டன உலகம் ‘என்று உரைக்கும் வாயினார். 6.36.68

ஏழுடைக் கடலினும் தீவு ஒர் ஏழினும்
ஏழுடை மலையினும் உலகு ஒர் ஏழினும்
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா
ஊழியில் காற்று எனத் திரிந்த ஓவில. 6.36.69

இராவணன் வீசிய அம்புகள் கடல் முதலிய இடங்களில் எல்லாம் மழைத்துளிகளைப்போல வீழ்தல்

உடைக்கடல் ஏழினும் உலகம் ஏழினும்
இடைப்படும் தீவினும் மலை ஒர் ஏழினும்
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம் மழைபடு துளியின் பான்மைய. 6.36.70

இராவணன் விடுத்த படைக்கலங்களை அறுத்தலும் தடுத்தலும் அன்றி வெகுண்டு இராமன் போர் செய்யாமை

ஒறுத்து உலகு அனைத்தையும் உரற்றும் ஓட்டின,
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழில் இடை செய்தது இல்லையால். 6.36.71

இரு தேரும் இலங்கையை எய்துதல்

விலங்கலும் வேலையும் மேலுங் கீழரும்
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக்காலக் காற்று
இலங்கையை எய்தின இமைப்பின் வந்து அரோ. 6.36.72

தேர்பூண்ட புரவிகளின் பெருமை

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி
எய்த்தில உயிர்த்தில இரண்டு பாலவும். 6.36.73

இராமன் ஏறிய தேரின் கொடியை இராவணன் அறுத்தல்

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த ஏந்து எழில்
உந்தரும் பெருவலி உருமின் ஏற்றினை
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரைச்
சிந்தினன் இராவணன் எரியும் சிந்தையான். 6.36.74

இடி கொடி பாய்ந்த கடலின்நீர் சுருங்குதல்

சாய்ந்த வல் உருமுபோய் அரவத் தாழ்கடல்
பாய்ந்த வெங்கனல் என முழங்கிப் பாய்தலும்
காய்ந்த பேர் இரும்பின் வன்கட்டி கால் உறத்
தோய்ந்த நீராம் எனச் சுருங்கிற்று ஆழியே. 6.36.75

மாதலிமார்பில் இராவணன் அம்புகளை அழுத்தல்

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப்பரிக்
குழுக்களைக் கூர்ங்கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரும் மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 6.36.76

இராவணன் அம்புகளால் இராமனை மறைத்தல்

மண்டல வரிசிலை வான வில்லொடும்
துண்ட வெண்பிறை எனத் தோன்றத் தூவிய
உண்டை வெங்கடுங்கணை ஒருங்கு மூடலால்
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார். 6.36.77

இராமன்மேல் பட்ட அம்புகளைக் கண்டு அமரர் அஞ்சுதலும் அரக்கர் ஆர்த்தலும்

‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்
ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே. 6.36.78

இராமன்மேல் அம்பு பட்டதன் விளைவுகள்

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல
வெங்கதிர் தண்கதிர் விலங்கி மீண்டன
மங்குலும் நெடுமழை வறந்து சாய்ந்ததால். 6.36.79


திசைநிலைக் கடகரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின;
விசைகொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடுமேருவும் குலுக்கம் உற்றதே. 6.36.80


வானரத் தலைவனும் இளைய மைந்தனும்
ஏனைய தலைவனும் ‘காண்கிலேம் ‘எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல்
மீன் எனக் கலங்கினார் வீரர் வேறு உளார். 6.36.81

இராவணன் எய்த அம்புகள் இராமனுக்கும் துயர் விளைத்தன

நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங்
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும். 6.36.82

இராமன் இராவணனை எய்து வருத்துதல்

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங்கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 6.36.83

இராவணனுடைய வில் ஒடியுமாறு இராமன் அம்பு எய்தல்

தூண் உடை நிரை புரை கரம் அவை தொறும் அக்
கோண் உடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வோடு
ஊண் உடை உயிர் தொறும் உறை உறும் ஒருவன். 6.36.84

இராமன் இராவணனது கவசத்தைப் பிளந்து அவன் குருதியைப் பருகுமாறு கணைகளை விடுதல்

கயில் விரிவுற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட வெயிலோடு
அயில் விரி சுடுகணை கடவினன் அறிவின்
துயில் புரிவுழி உணர் சுடர் ஒளி ஒருவன். 6.36.85

இராவணனது வீணைக் கொடியை வீழ்த்துதல்

திசை உறு துகிலது செறி மழை சிதறும்
விசை உறு முகிழது விரிதரு சிரனோடு
இசை உறு கருவியின் இலகுறு கொடியைத்
தசை உறு கணை கொடு தரை உற இடலும். 6.36.86

படை உக இமையவர் பருவரல் கெட வந்து
இடை உறு திசை திசை இடுகுற இறைவன்
அடையுறு கொடி மிசை அணுகினன் அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 6.36.87

இராமனது கொடியில் கலுழன் அமர்ந்தது கண்டு தேவர் மகிழ்தல்

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன்
நண்ணலும் இமையவர் ‘நமது உறு கருமம்
எண்ணலன் முனிவினின் இவறினன் ‘எனவே. 6.36.88

இராமன்மேல் தாமதக் கணையை இராவணன் எய்தல்

ஆயது ஒர் அமைதியின் அறிவினுள் அறிவன்
நாயகன் ஒருவனை நலிகிலது உணரான்
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தருபடை தறெு தொழில் மறவோன். 6.36.89

தாமதக்கணையின் தன்மை (9934-9936)

தீ முகம் உடையன சில முகம்; உதிரம்
தோய் முகம் உடையன; சுரர்முகம் உடைய;
பேய் முகம் உடையன; பில முகம் நுழையும்
வாய் முக வரி அரவு அனையன வருமால். 6.36.90

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்
இரு திசை எயிறு உற வருவன; பெரிய;
கருதிய கருதிய புரிவன; கனலும்
பருதியை மதியொடு பருகுவ பகழி. 6.36.91

இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம். 6.36.92

இத்தகைய தாமதக்கணைக்கும் இராமன் நினைவு மயங்காமை

இனையன நிகழ்வுற எழுவகை உலகும்
கனை இருள் கதுவிட உயிர் இடை கதற
வினை அறு தொழில் இடை விரவலும் விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின். 6.36.93

இராமன் விட்ட சிவன் கணையால் தாமதக்கணை அழிதல்

கண்ணுதல் ஒருவனது அடுபடை கருதிப்
பண்ணவன் விடுதலும் அது நனி பருக;
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில்
துண்ணெனும் நிலையினின் எறிபடை தொலைய. 6.36.94

அது கண்டு பொறாத இராவணன் இராமனது மேனியில் அம்புகளை அழுத்தல்

விரிந்த தன்படை மெய்கண்ட பொய் என வீய,
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தரெிந்த வெங்கணை, கங்க வெம் சிறையன திறத்த
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 6.36.95

இராவணன் ஆசுரப்படை விடுதல்

ஆர்த்து, வெஞ்சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன் மேல் செலத் துரந்தனன், உலகங்கள் திரிய. 6.36.96

இராமன் அங்கியின்கணை விடுத்து ஆசுரக்கணையை அழித்தல்

‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடிவரை ‘என்ன,
எங்கும் எங்கும் நின்று அலமரும் அமரர்கண்டு இரைப்ப,
மங்குல் வல் உரும் ஏற்றின் மேல் எரிமடுத்து என்ன
அங்கி தன் நெடும்படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 6.36.97

இராவணன் கோடிக்கணக்கான கொடிய அம்புகளை எய்தல்

கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 6.36.98

இராவணனது விற்போரைப் பலரும் பாராட்டுதல்

‘என்ன கைக்கடுப்போ! ‘என்பர் சிலர்; சிலர், ‘இவையும்
அன்ன மாயமே; அம்பு அல ‘ என்பர்; ‘அவ் அம்புக்கு
இன்னம் உண்டு கொல் இடம் ‘என்பர் சிலர்; சிலர் ‘‘இகல்போர்
முன்னம் இத்தனை முயன்றிலன் ஆம் ‘ என மொழிவர். 6.36.99

மறை முதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் சிந்தப்
பொறை சிகைப் பெருந் தலை நின்றும் புங்கத்தின் அளவும்
பிறைமுகக் கொடுங் கடுஞ்சரம் அவை கொண்டு பிளந்தான். 6.36.100

இராவணன் மயன்கணை தொடுத்தல்

அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந்தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், ‘பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி ‘என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 6.36.6.36.101

மயன்கணை கண்டு வானவரும் வானரரும் அஞ்சுதல்

‘விட்டனன் விடு படைக்கலம் வேரோடும் உலகைச்
சுட்டனன் ‘எனத் துணுக்கம் உற்று, அமரரும் சுருண்டார்;
‘கெட்டனம் ‘என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனி தேவனும் அதன் நிலை தரெிந்தான். 6.36.102

இராமன் காந்தருவம் என்னும் கணையால் மயன்கணையை மாய்த்தல்

‘பாந்தள் பல்தலைப் பரந்து அகன் புவி இடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு ‘என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்
ஏந்தல் பன்மணி எறுழ்வலித் திரள்புயத்து இராமன். 6.36.103

இராவணன் தண்டு கொண்டு வீசுதல்

‘பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என்வயின் அது துரந்து உயிர் உண்பென் ‘என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தோடு ஐந்துடைத் தலையான். 6.36.104

இராவணனது கதையின் பெருமை(9949-9950)

தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேரு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம்தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரங்கள். 6.36.105

பசும் புனல் பெரும்பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ. 6.36.106

இராமன் தன் அம்பினால் அந்தக் கதையை நீறு ஆக்கியது

கண்டு, தாமரைக் கண்ணன், அக் கடவுள் மாக் கதையை,
அண்டர் நாயகன் ஆயிரம் கண்ணினும் அடங்காப்
புண்டரீகத்தின் முகை அன்ன புகர்முகம் விட்டான்
உண்டை நூறுடன் நீறுபட்டுளது என உதிர்த்தான். 6.36.107

மாயையின்கணை விட இராவணன் எண்ணுதல்

‘தேய நின்றவன், சிலைவலம் காட்டினான்; தீராப்
பேயை என்பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன்பெரும் படையொடும் அடுகளத்து அவிய
மாயையின் படை தொடுப்பன் ‘என்று, இராவணன் மதித்தான். 6.36.108

இராவணன் மாயையின் கணையை விடுதல்

பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசினன் செல, வில் இடை தொடைகொடு விட்டான். 6.36.109

மாயையின் கணையால் இறந்த அரக்கர் எழுந்து ஆர்த்தல்

மாயம் பொத்திய வயப்படை விடுதலும், வரம்பு இல்
காயம் அத்தனையும், நெடுங் காயங்கள் கதுவ,
ஆயு உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில்
தூய கொற்றவர் சுடுசரத்தால் முன்பு துணிந்தார். 6.36.110

இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும் வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 6.36.111

குடப் பெருஞ் செவிக்குன்றமும், மற்றுள குழுவும்,
படைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன; யானை, தேர், பரி முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அவ் வழி அடைந்த. 6.36.112

ஆயிரம் பெருவெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய்சினப் பெருங் கடல் படை களப்பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம் முற்றவும் செறிந்தன, திசைகளும் திகைப்ப. 6.36.113

சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த
‘வென்றது எங்களைப் போலும்; யாம் விளிவதும் உளதே?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின் ‘என்னா,
கொன்ற கொற்றவர் தம்பெயர் குறித்து அறை கூவி. 6.36.114

மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்
பார் இடந்துகொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
‘பேர் இடம் கதுவரிது, இனி விசும்பு ‘என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங்குழை அணிந்தன பேய்கள். 6.36.115

தாமசத்தினிற் பிறந்தவர், அறம் தறெும் தகையர்,
தாமசத்தினில் செல்கிலாச் சது முகத்தவற்கும்
தாமசத்தினைச் செய்பவர் அடைந்தனர் தளராத்
தாம சத்திரம் சித்திரம் பொருந்தினர் தயங்க. 6.36.116

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கும் வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல்பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர் திசைதொறும் தருக்கி. 6.36.117

தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந்திசை உலகொடு தகைவார்,
தாம் மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் பகையார்,
தா மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார். 6.36.118

மாயப்படையின் விளைவு கண்டு இராமன் மாதலியை வினவுதல்

இனைய தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்,
‘வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ?
வனையும் வன்கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ?
நினைதியாம் எனின், பகர் ‘என, மாதலி நிகழ்த்தும். 6.36.119

மாதலியின் மறு மொழி (9964-9965)
இருப்புக் கம்மியற்கு இழைநுழை ஊசி ஒன்று இயற்றி,
விருப்பின் ‘கோடியால் விலைக்கு ‘எனும் பதடியின், விட்டான்
கருப்புக் கார்மழை வண்ண! அக் கடுந்திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீளரு மாயம். 6.36.120

வீய்க்கும் வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெம் விடத்தை
மாய்க்குமா நெடுமந்திரம் தந்தது ஓர் வலியின்,
நோய்க்கும் நோய்தரு வினைக்கும் நின் பெரும்பெயர் நொடியின்,
நீக்குவாய்! நினை நினைப்பவர் பிறப்பு என நீங்கும். 6.36.121

மாதலி வேண்ட இராமன் ஞானமாக்கணையை விடுதல்

‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்
உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும் ஓடத்
துரத்தியால் ‘என, ஞானமாக் கடுங்கணை துரந்தான்
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தொடரவும் சேயோன். 6.36.122

ஞானக்கணையால் மாயையின் விளைவு மாய்தல்

துறத்தல் ஆற்றுறு ஞானமாக் கடுங்கணை தொடர,
அறத்து அலாது செல்லாத நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அம்மாயம். 6.36.123

இராவணன் சூலப்படை விடுதல்

நீலம் கொண்டு ஆர்கண்டனும், நேமிப் படையோனும்,
மூலம் கொண்டு ஆர் கண்டகர் ஆவி முடிவிப்பான்,
காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான்,
சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 6.36.124

இராவணன் விட்ட சூலத்தை இராமன் காணுதல்

கண்டா குலம் உற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, ‘வீரர்
கண், தா, குலம் முற்றும் சுடும் ‘ என்று அக்கழல் வெய்யோன்,
கண் தாகுதல் முன், செல்ல விசைத்து உள்ளது கண்டான். 6.36.125

வருகின்ற சூலத்தின் இயல்பு

எரியா நிற்கும் எஃகு இலை மூன்றும் எரி அஞ்ச,
திரியா நிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட,
இரியா நிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய்,
விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா. 6.36.126

சூலத்தை அழிக்குமாறு தேவர்கள் இராமனை வேண்டுதல்

‘செல்வாய் ‘என்னச் செல்ல விடுத்தான்; ‘இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்;
வல்வாய் வெங்கண் சூலம் எனும் காலனை, வள்ளால்!
வெல்வாய், வெல்வாய்! ‘என்றனர், வானோர், மெலிகின்றார். 6.36.127

இராமன் எய்த கணைகள் பயனின்றிப் போதல்

துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே
நினையும் ஞானக்கண் உடையார்மேல் நினையாதார்
வினையம் போலச் சிந்தின வீரன்சரம் வெய்ய. 6.36.128

இராமன் செய்வதறியாது நிற்றல் (9973-9974)

எய்யும், எய்யும் தேவருடைத் திண்படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவிதந்தான்
வய்யும் சாபம் ஒப்பன, ஒப்பு இல் அது கண்டான்,
அய்யன் நின்றான், செய்வதை ஒன்றும் அறிகில்லான். 6.36.129

‘மறந்தான் செய்கை; மாறு எதிர் செய்யும்வகை எல்லாம்
துறந்தான் ‘என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே
பிறந்தான், நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 6.36.130

இராமனது உங்காரத்தால் சூலம் சிதைதல்

சங்காரத்தான் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும்,
வெங்காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர்
உங்காரத்தால் உக்கது, பல்நூறு உதிராகி. 6.36.131

அமரரின் அகமகிழ்ச்சி

ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர்மாரி
தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார்,
‘தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வருதீமை
பேர்ப்பாய் போலாம்! ‘என்றனர் வானோர், உயிர்பெற்றார். 6.36.132

இராவணன் தன் சூலம் சிதைந்தது கண்டு வீடணன் சொல்லியதை நினைதல்

‘வென்றான் ‘என்றே உள்ளம் வியந்தான் விடுசூலம்
‘பொன்றான் என்னின் போகலது ‘ என்னும் பொருள் கொண்டான்,
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந்நாள் வீடணனார் சொல் நினைவு உற்றான். 6.36.133

இராமனை ‘வேத முதற்காரணனோ? ‘என இராவணன் எண்ணுதல்

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல் காரணன்? ‘என்றான். 6.36.134

யாவரே ஆயினும் பொருவேன் எனல்

‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன்
நேரே செல்வென், கொல்லும் எனின்தான் நிமிர்வென்றி
வேரே நிற்கும்; மீள்கிலது ‘ என்னா, மிடல், உற்றான். 6.36.135

நிருதியின் படையை இராவணன் ஏவுதல்

நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப்படை நெஞ்சில்
கருத, தன்பால் வந்ததை வன்கைக் கொடு, காலன்
விருதைச் சிந்தும் வில்லின் வலித்துச் செலவிட்டான்
குருதிச் செங்கண் தீஉக, ஞாலம் குலைவு எய்த. 6.36.136

நிருதிப் படை வருதல் (9981-9983)

வய்யந் துஞ்சும் வன்பிடர் நாகம் மனம் அஞ்ச,
பய்யும் கோடிப் பல்தலையோடும் அளவு இல்லா
மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகின்ற. 6.36.137

வாய்வாய் தோறும் மாகடல் போலும் விட வாரி
போய்வார்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற,
மீவான் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய்வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 6.36.138

‘கடித்தே தீரும்; கண்ணகன் ] ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும் ‘என்று உயிர் எல்லாம் குலைகின்ற,
‘முடித்தான் அன்றோ, வெங்கண் அரக்கன்? முழுமுற்றும்
பொடித்தான் ஆகும், இப்பொழுது ‘ என்னப் புகைகின்ற. 6.36.139

இராமன் காருடக் கணையை விடுதல்

அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற; மால்வரை முற்றும் வகை கண்டான்;
‘எவ்வாய் தோறும் எய்தின ‘ என்னா, எதிர் எய்தான்,
தவ்வா மெய்ம்மைக் காருடம் 6.36.140

காருடக் கணையின் இயல்பு (9985-9987)

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,
பவணத்து அன்ன வெஞ்சிறை வேகத்தொழில் பம்ப,
சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெம் போர்
உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 6.36.141

அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல்
துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன,
‘இளக்கரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு ‘என
விளக்கு இனம் எடுத்தன போன்ற விண் எலாம். 6.36.142

குயின்றன சுடர்மணி, கனலின் குப்பையின்
பயின்றன, சுடர்தரப் பதும நாளங்கள்
வயின்தொறும் கவர்ந்து என, பணியை வாய்களால்
அயின்றன, புள் இனம் உகிரின் அள்ளின. 6.36.143

ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடித்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடுசரம் உருமின் தோற்றத்த. 6.36.144

இராவணன் அது கண்டு சினந்து சரங்களைத் தூவுதல்

அங்கு அ(வ்) வெங்கடுங்கணை அயிலின் வாய்தொறும்,
வெங்கணை படப்பட, விசையின் வீழ்ந்தன;
புங்கமே தலையெனப் புக்க போலுமால்;
துங்கவாள் அரக்கனது உரத்தில் தோன்றல. 6.36.145

இராவணன் நிலைதளர இராமன் வலி மிகுதல்

ஒக்கநின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன விஞ்சைகள் நிலையில் தீர்ந்தன;
மிக்கன இராமற்கு வலியும் வீரமும். 6.36.146

இராமன் இராவணன் தலையை அறுத்தல்

வேதியர் வேதத்து மெய்யன் வெய்யவர்க்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்
பாதியின் மதிமுகப் பகழி ஒன்றினால். 6.36.147

அற்ற தலை கடலிடை வீழ்தல்

மேருவின் கொடுமுடி வீசு கால் எறி
போரிடை ஒடிந்துபோய் புணரி புக்கு என
ஆரியன் சரம்பட அரக்கன் வன்தலை
நீரிடை விழுந்தது நேர்கொண்டு ஒன்றுபோய். 6.36.148

தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்

குதித்தனர் பாரிடை குன்று கூறு உற
மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினர்;
துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினர்;
மதித்தனர் இராமனை வானுேளார் எலாம். 6.36.149

இராவணன் தலை மீண்டும் முளைத்தல்

இறந்ததோர் உயிர் உடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் எனப் பெயர்த்தும் ஓர்தலை
மறந்திலது எழுந்தது மடித்த வாயது;
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ? 6.36.150

எழுந்த தலை இராமனை இகழ்ந்து அதட்டுதல்

கொய்தது கொய்து இலது என்னும் கொள்கையின்
எய்த வந்து, அக்கணத்து எழுந்ததோர் சிரம்,
செய்த வெஞ்சினத்துடன் சிறக்கும் செல்வனை
வய்தது, தழெித்தது, மழையின் ஆர்ப்பது. 6.36.151

அற்றுக் கடலில் விழுந்த தலையின் செயல்

இடந்தது கிரி குவடு என்ன எங்கணும்
படர்ந்தது குரைகடல் பருகும் பண்பது
விடம்தரு விழியது முழுகி வேலையில்
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது. 6.36.152

இராமன் தோள்களில் பதினான்கு அம்புகளை அழுத்தி இராவணன் ஆரவாரித்தல்

‘விழுத்தினன் சிரம் ‘எனும் வெகுளி மீக் கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்ததோர்
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழுகோல்
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 6.36.153

இராமன், இராவணனது விற்பிடித்த கையை அறுத்தல்

‘தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு ‘என
நிலை உறு நேமியான் அறிந்து நீசனைக்
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் தலத்தில் சேர்த்தினான். 6.36.154

கொற்றவன் சரம்படக் குறைந்துபோன கை
பற்றியே கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஒர் கைப் பிடித்தது போல வவ்வியது
அற்றகைப் பிறந்தகை யார் அது ஓர்குவார். 6.36.155

மாதலிமேல் எறிதற்காக அற்ற கையை இராவணன் எடுத்தல்

பொன்கையிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான்
முன் கையில் துறுமயிர் முள்ளின் துள்ளுற,
மின் கையில் கொண்டு என வில்லை விட்டிலா
வன் கையைத் தன்கையின் வலியின் வாங்கினான். 6.36.156

அற்றகையால் தாக்குண்ட மாதலி இரத்தம் கக்குதல்

விளங்கு ஒளி வயிரவாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தடக்கைதன் மார்பில் தாக்கலும்,
உளம்கிளர் பெருவலி உலைவு இல் மாதலி
துளங்கினன், வாய்வழி உதிரம் தூவுவான். 6.36.157

மாதலிமேல் இராவணன் தோமரம் எறிதல்

மாமரத்து ஆர்கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினான்
தாம் அரத்தால் பொராத் தகைகொள் வாட்படை,
காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான். 6.36.158

இராமன்கணையால் தோமரம் துகளாதல்

‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு ‘என
மூண்ட வெந் தழல் சிந்தி முடுகலும்
ஆண்ட வில்லி ஓர் ஐம்முக வெங்கணை
தூண்டினான்; துகள் ஆனது தோமரம். 6.36.159

இராமன் இராவணன் தலைகளை அறுத்தல்

ஓய்வு அகன்றது ஒருதலை நூறு உற
போய் அகன்று புரள பொருகணை
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்துவான். 6.36.160

தலைகள் பலவிடங்களிலும் வீழ்தல்

நீர்த் தரங்கங்கள் தோறும் நிலம்தொறும்
சீர்த்த மால்வரை தோறும் திசைதொறும்
பார்த்த பார்த்த இடந்தொறும் பல்தலை
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து என. 6.36.161

வீழ்ந்த தலைகளின் விளைவு

தகர்ந்து மால்வரை சாய்வுறத் தாக்கின;
மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன;
புகுந்த மா மகரக் குலம் போக்கு அற
முகந்த வாயின் புணரியை முற்றுற. 6.36.162

அற்றுவீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தொண்டுதல்

பொழுது நீடித்த புண்ணியம் போனபின்
பழுது செல்லும் அன்றே மற்றைப் பண்பு எலாம்?
தொழுது சூழ்வன முன் இன்று தோன்றிட
கழுது சூன்ற இராவணன் கண் எலாம். 6.36.163

இராவணன் வாள் முதலிய படைகளை இராமன்மேல் வீசுதல்

வாளும் வேலும் உலக்கையும் வச்சிரக்
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும்
தோளின் பத்திகள் தோறும் சுமந்தன
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 6.36.164

இராமனும் இராவணன் உடம்பினை அம்பினால் புனைவேன் எனச் சினத்தல்

அனைய சிந்திட ஆண்தகை வீரனும்
‘வினையம் என்னினி? யாதுகொல் வெல்லுமா?
நினைவென் ‘என்ன ‘நிசாசரன் மேனியைப்
புனைவென் வாளியினால் ‘எனப் பொங்கினான். 6.36.165

இராவணன் மேனியை அம்பினால் மூடுதல் (10010-10011)

மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்
வஞ்சன் மேனியை வார்கணை அட்டிய
பஞ்சரம் எனலாம் வகை பண்ணினான். 6.36.166

வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன
தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில
போய்நிறைந்தன அண்டப் புறம் எலாம். 6.36.167

அம்புகள் துளைத்தமையால் இராவணன் சோர்தல்.

மயிரின் கால்தொறும் வார்கணை மாரி புக்கு
உயிரும் தீர உருவின ஓடலும்
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான். 6.36.168

இராவணன் செயலற்று இருத்தல்

வாரி நீர்நின்று எதிர்மகரம் படச்
சோரி சோர உணர்வு துளங்கினான்;
தேரின்மேல் இருந்தான் பண்டு தேவர்தம்
ஊரின் மேலும் பவனி உலாவுவான். 6.36.169

இராவணனது பாகன் தேரைப் பின்னால் விலக்குதல்

ஆர்த்துக் கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்;
வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது;
‘போர்த் துப்பு ஓய்ந்தனன் ‘ என்று, பொலன் கொள்தேர்
பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 6.36.170

இராவணன் தளர்ச்சிகண்டு இரங்கி இராமன் அம்பு விடாமை

கய் துறந்த படையினன் கண் அகல்
மெய்துறந்த உணர்வினன் வீழ்தலும்
எய்திறம் தவிர்ந்தான் இமையோர்களை
உய்திறம் துணிந்தான் அறம் உன்னுவான். 6.36.171

சோர்வுற்றபோழ்தே அவனுயிரை வாங்குக என மாதலி கூறுதல்

‘தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறு தான் உற்ற போழ்தே உயிர்தனை
நூறுவாய் ‘என மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும் இது இயம்பினான். 6.36.172

படை துறந்து சோர்ந்தவன்மேல் படை துரத்தல் நீதியன்று எனல்
‘படைதுறந்து மயங்கிய பண்பினோன்
இடை பெறும் துயர் பார்த்து இகல்நீதியின்
நடைதுறந்து உயிர்கோடலும் நன்மையோ?
கடைதுறந்தது போர் என்கருத்து ‘என்றான். 6.36.173

இராவணன் தெளிதல்

கூவிரம் செறி பொன் கொடித் தேரோடும்
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின்
ஏவர் அஞ்சலியாதவர்? எண் உடை
தேவர் அஞ்ச இராவணன் தேறினான். 6.36.174

தெளிவுற்ற இராவணன் இராமனைத் தன்முன் காணாமையால் சினந்து நோக்குதல்

உறக்கம் நீங்கி உணர்ச்சி உற்றான் என
மறக்கண் வஞ்சன் இராமனை வான்திசைச்
சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப்
பிறக்க நோக்கினன் பின் உற நோக்கினான். 6.36.175

சாரதியை இராவணன் சலித்துக்கொள்ளுதல்
10021. 6.36.‘தேர் திரித்தனை தேவரும் காணவே;
வீர விற்கை இராமற்கு வெண்நகை
பேர உய்த்தனையே; பிழைத்தாய் ‘எனா
சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 6.36.176

‘தஞ்சம் என்று உனை எண்ணத் தருதலால்
வஞ்ச! நீபெருஞ் செல்வத்து வைகினை;
“அஞ்சினேன் ” எனச் செய்தனை ஆதலான்
உஞ்சிபோதி கொலாம்! ‘என்று உருத்து எழா. 6.36.177

சாரதி பணிந்து தேரைத் திருப்பிய காரணத்தை இராவணனுக்குத் தரெிவித்தல் (10022-10024)

வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்
தாள் கடைக்கணியாத் தலை தாழ்வுறா,
‘மூள் கடைக்கடுந் தீயின் முனிவு ஓழி,
கோள் கடைக்கணித்து ‘ என்று அவன் கூறுவான். 6.36.178

ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆங்கு இறை
ஈண்ட நிற்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது இக்கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது இத்தொழில், எம் வினை; மெய்ம்மையால். 6.36.179

‘ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர்ப் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மையால்
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால். 6.36.180

இராவணன் இரக்கங்கொண்டு தேரைத் திருப்பச்செய்து இராமனைக் காணுதல்

என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான்
‘வென்றி அம்தடந் தேரினை மீட்க! ‘என
சென்று எதிர்ந்தது தேரும்; அத் தேர்மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 6.36.181

இராவணன் இராமன்மேல் அம்புகளைச் சொரிதல்

கூற்றின் வெங்கணை கோடியின் கோடிகள்
தூற்றினான் வலி மும்மடி தோற்றினான்;
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால்
ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 6.36.182

இராவணனது வில்லை முறிக்க இராமன் அம்பு எய்தல்

“‘எல் உண்டாகின் நெருப்பும் உண்டு “ என்னும் இச்
சொல் உண்டாம்; அது போல், இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் ‘எனா,
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 6.36.183

இராவணன் வில் இரு கூறாதல்
10029. 6.36.நாரணன் படை நாயகன் உய்ப்பு உறா
பார் அணங்கினைத் தாங்குறும் பல்வகை
வாரணங்களை வென்றவன் வார்சிலை
ஆர் அணங்கை இருதுணி ஆக்கினான். 6.36.184

வில் முறிந்தமை கண்டு தேவர்கள் மகிழ்ந்து குதித்தல்

அயன் படைத்தவில் ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரார்
பயன் படைத்தனம் பல்தவத்தால் என்றார். 6.36.185

இராவணன் எடுத்த வேறு விற்களை எல்லாம் இராமன் நுறுக்குதல்

மாறி மாறி வரிசிலை வாங்கினான்
ஆறு நூறினொடு ஐ இரு நூறு அவை
வேறு வேறு திசை உற வெங்கணை
நூறி நூறி இராமன் நுறுக்கினான். 6.36.186

இராமன்மேல் இருப்புலக்கை முதலியவற்றை வீசுதல்

இருப்பு உலக்கை, நீள் தண்டு, வேல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான் திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 6.36.187

இராவணனைக் கொல்லுநெறி யாதனெ இராமன் ஆராய்தல் (10032-10033)

அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில்
குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து,
‘இவை அனைத்தும் இவனை வெல்லா ‘என,
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 6.36.188

‘கண்ணினுள் மணியூடு கழிந்தன
எண்ணின் நுண்மணலின் பல வெங்கணை;
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர்
எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று ‘எனா 6.36.189

அயன்கணை எய்யத் துணிதல்

‘நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம்படை வாங்கி இப் பாதகன்
மாரின் எய்வென் ‘என்று எண்ணி வலித்தனன்
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான். 6.36.190

இராமன் பிரமாத்திரம் தொடுத்தல்

முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா
மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 6.36.191

பிரமாத்திரம் விடுதல்

புரம் சுடப் பண்டு அமைத்தது பொன் பணை
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது
அரம் சுடச்சுடர் அம்பது அவ் ஆற்றலான்
உரம் சுடச் சுடரோன்மகன் உந்தினான். 6.36.192

அயன்கணை செல்லுதல் (10037-10038)

காலும் வெம் கனலும் கடை காண்கிலா
மாலும் கொண்ட வடிக்கணை மாமுகம்
நாலும் கொண்டு நடந்தது நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 6.36.193

ஆழி மால்வரைக்கு அப்புறத்து அப்புறம்
பாழி மால்கடலும் ஒளி பாய்ந்ததால்
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புறும்
வாழி வெஞ்சுடர் பேர் இருள் வாரவே. 6.36.194

அயன்கணை இராவணன் மார்பில் புகுதல்

அக்கணத்தின் அயன்படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று
புக்கது அக்கொடியோன் உரம்; பூமியும்
திக்கு அனைத்தும் விசும்பும் திரியவே. 6.36.195

இராமன் அம்பு இராவணன் உயிரைப் பருகிப்போதல்

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும்,
        முதல்வன் முன்நாள்,
‘எக்கோடியாராலும் வெலப்படாய் ‘ எனக்கொடுத்த
        வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய
        வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று,
        இராகவன்தன் புனித வாளி. 6.36.196

இராவணனைக் கொன்ற அம்பு நீராடி இராமனது தூணியில் புகுதல்

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும்,
        ஆசிகூறித்
தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய், பாற்கடலில்
        தூய்நீர் ஆடி,
தேர் குன்றம் இராவணன்தன் செழுங்குருதிப் பெரும்பரவைத்
        திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணைப் புட்டிலின்
        நடுவண் கரந்தது அம்ம 6.36.197

இராவணன், தேரிலிருந்து தலைகீழாகத் தரையில் வீழ்தல்

கார்நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ எனத் திணி
        தோள் காட்டின் நின்றும்
தார்நின்ற மலைநின்றும், பணி குலமும் மணிக்குலமும்
        தகர்ந்து சிந்த,
போர்நின்ற விழிநின்றும் பொறிநின்ற புகையோடும்
        குருதி பொங்க,
தேர்நின்ற நெடுநிலத்துச் சினம் முகம் கீழ்ப்பட விழுந்தான்,
        சிகரம்போல்வான். 6.36.198

இராவணன் உயிர்துறந்த முகங்கள் பொலிவுடன் தோன்றுதல்

வெம்மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க,
        மனம் அடங்க, வினையம் வீய,
தமெ் அடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க,
        மயல் அடங்க, ஆற்றல்தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க, நிலை
        அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர்துறந்த
        முகங்கள் அம்மா. 6.36.199

விண்ணிலிருந்து இராமன் இராவணன் மேனியை முற்றும் பார்த்தல்

‘பூதலத்தது ஆக்குவாயாக, இனிப் பொலம்
        தேரை ‘என்ற போதில்,
மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின்
        அப்பொழுதே வருதலோடும்,
மீது அலைத்த பெருந்தாரை விசும்பு அளப்பக்
        கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உருவாகி, அறம் வளர்க்கும்
        கண்ணாளன் தரெியக் கண்டான். 6.36.200

இராமன் தரையில் இறங்கி இராவணனுடம்பை நெருங்கி நோக்குதல்

‘தேரினை நீகொடு விசும்பில் செல்க ‘என்ன
        மாதலியைச் செலுத்தி, பின்னர்,
பாரிடம் மீதினின் அணுகி, தம்பியொடும்
        படைத்தலைவர் பலரும் சுற்ற,
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப்
        போர்வீரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உருமுற்றும்
        திருவாளன் தரெியக் கண்டான். 6.36.201

கவிக்கூற்று: இராவணன் மேனிமேல் வானரங்கள் ஏறி விளையாடுதல்

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொதுநின்ற செல்வத்தின்
        புன்மைத் தன்மை
நிலைமேலும் இனி உண்டே? ‘நீர்மேலைக் கோலம்
        ‘எனும் நீர்மைத்து அன்றே
தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின்
        படர்புறத்தும் தாவி ஏறி,
மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால்,
        வானரங்கள், வரம்பு இலாத. 6.36.202

இராவணன் முதுகில் திசை யானையின் கொம்புகள் வெளிப்பட்டிருப்பதை இராமன் பார்க்கின்றான்

தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத
        கிளைவண்டின் சுழியல் தொங்கல்
பாடு உழுத படர்வெரிநின் பணி உழுத அணிநிகர்ப்ப,
        பணைக்கை யானைக்
கோடு உழுத நெடுந்தழும்பின் குவைதழுவி, எழுமேகக்
        குழுவின் கோவைக்
காடு உழுத கொழும்பிறையின் கறைகழன்று
        கிடந்தனபோல் கிடக்கக் கண்டான் 6.36.203

இராவணனது புறப்புண் வடுவைக் கண்ட இராமன் சிரித்தல்

தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் குழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளரியல் வடுவின் செம்மைத் தன்மையும் மருவ நின்ற
முளரி அம்கண்ணன் மூரல் முறுவலன், மொழிவது ஆனான். 6.36.204

இராவணன் முதுகில்பட்ட பிழம்பு இருத்தலால் இவன் போரில் புறமுதுகிட்டவனே என இராமன் வருந்துதல் (10049-10050)

வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினானும்
பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்பும்
குன்றி ஆசு உற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில்பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 6.36.205


“‘கார்த்த வீரியன் என்பானால் கட்டுண்டான் “ என்னச் சொல்லும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலைப் புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பு போலாம்
நேர்த்ததும் காணல் உற்றது; ஈசனார் இருக்கை நிற்க! 6.36.206

இராமன், இராவணனை வென்ற வெற்றி சிறந்தது ஆகாது என வீடணனை விளித்துக்கூறியது

‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,
ஊண்தொழில் உகந்து, தவெ்வர் முறுவல் என் புகழை உண்ண,
பூண்தொழில் உடைய மார்பா! போர்ப் புறம் கொடுத்தோர்ப் போன்ற
ஆண்தொழிலோரின் பெற்ற வெற்றியும் அவத்தம் ‘என்றான். 6.36.207

வீடணன் வருந்திச் சொல்லத் தொடங்குதல்

அவ்வுரை உரைப்பக் கேட்ட வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ்வுயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ! ‘என்னா,
எவ்வுயிர்ப் பொறையும் நல்கி இரங்கிநின்று, இனைய சொன்னான். 6.36.208

இராவணனது வீரம்

‘ஆயிரம் தோளினானும், வாலியும் அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள் மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின்முனிவும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 6.36.209

இராவணன் முதுகில் வடு இருந்தமைக்குக் காரணம் கூறுதல் (10054-10057)

‘நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும் பெருந்திசை எல்லை யானைக்
கோடு உள தனையும் புக்குக் கொடும்புறத்து அழுந்து புண்ணின்
பாடு உளது அன்றி, தவெ்வர் படைக்கலம்பட்டு என் செய்யும்? 6.36.210

அப்பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக்
கைப்பணை முழங்க, முன்நாள் அமரிடைக் கிடைத்த போது உன்
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலே வெரிந் இடை போய அன்றே. 6.36.211

அவ்வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தவெ் அடு படைகள் அஞ்சாது இவன்வயின் செல்லின், தேவ!
வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை
அவ்விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 6.36.212

‘வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலைசூழ் ஞாலம் எல்லாம்
பன்றியாய் எயிற்றுக்கொண்ட பரம்பரன் முதல பல்லோர்,
“என்றுயாம் இடுக்கண்தீர்வது? “ என்கின்றார்; “இவன் இன்று உன்னால்
பொன்றினான் ‘‘ என்ற போதும், புலப்படார், ‘‘பொய்கொல் ‘‘ என்பார் ‘ 6.36.213

வீடணன் சொல்லைக் கேட்ட இராமன் மன நிறைவு பெற்றவனாய் இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய ஏவுதல்

'அன்னதோ? ‘என்னா, வீரன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்னதோள் இணையை நோக்கி, ‘வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ இறந்துளான்மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு ஈண்டு
சொன்னது ஓர் விதியினாலே கடன்செயத் துணிதி ‘என்றான். 6.36.214

தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல்

அவ்வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்கேளாடும்
எவ்வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண,
செவ்வையின் அவர்முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான். 6.36.215

வீடணன் இராவணன் மேனிமேல் வீழ்தல்
‘போழ்ந்தனெ அரக்கன்செய்த புன்தொழில் பொறையிற்று ஆமால்,
வாழ்ந்தநீ இவனுக்கு ஏற்ற வரன்முறை வகுத்தி ‘என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி,
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலைவீழ்ந்தனெ்ன 6.36.216

ஏவரும், உலகத்து எல்லா உயிர்களும், எரியும் நெஞ்சத்
தேவரும், முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் கூர,
தாஅரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க நின்ற
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகுவாய் ஆர. 6.36.217

வீடணன் வாய்திறந்தரற்றியது (10062-10068)

‘உண்ணாதே உயிர் உண்ணாது ஒருநஞ்சு; சனகி
        எனும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்; நீயும்
        களம் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணியசொல் இன்று இனித்தான்
        எண்ணுதியோ? எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம்
        பிரளயமே! அமரர் கூற்றே. 6.36.218

‘ஓராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல்
        உடைய காதல்
தீர்; ஆசை பழி ‘‘ என்றேன்; எனைமுனிந்த முனிவு
        ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும்
        பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேராசை பேர்ந்ததோ? பேர்ந்து ஆசைக் கரி
        இரியப் புருவம் பேர்த்தோய்! 6.36.219

"அன்று எரியில்விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு
        ஓர் அன்னை “ என்று,
குன்று அனைய நெடுந்தோளாய்! கூறினேன், அது மனத்துள்
        கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில்
        படக்கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவன்தன் புயவலியை
        இன்று அறிந்து போயினாயோ? 6.36.220

‘மன்றல் மாமலரானும், வடிமழுவாள்
        படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி
        ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும்
        வான்நாட்டை அணுகா நின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன் தான்
        யாவருக்கும் இறைவன் ஆதல். 6.36.221

‘வீரநாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவருக்கும்
        மேலாம் உன்தன்
பேரன்நாடு உற்றாயோ? பிறைசூடும் பிஞ்ஞகன்தன்
        புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு
        அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ,
        மதியம் என்பான்? 6.36.222

‘கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் “ என்று
        அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்
        பகை தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார்,
        நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார்முகத்தே விழிக்கின்றாய்?
        எளியை ஆனாய்! 6.36.223

‘போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை,
        தழுவியகை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தரெிவரிய
        தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர்கொடுத்து, பழிகொண்ட
        பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசையானை பணை
        இறுத்த பணைத்த மார்பால்? 6.36.224

சாம்பவன் ஆறுதல் கூற வீடணன் தேறுதல்

என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம்
        எண்கின் வேந்தன்,
‘குன்று ஓங்கு நெடுந்தோளாய்! விதிநிலையை மதியாத
        கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?
        ‘என்னத் தேறி
நின்றான், அப்புறத்து அரக்கன் நிலைகேட்டாள், மயன்பயந்த
        நெடுங்கண் பாவை. 6.36.225

மண்டோதரி இராவணன் கிடக்கும் இடத்தை அடைதல்

அனந்தம் நூறு ஆயிரம் அரக்கர் மங்கைமார்
புனைந்த பூங்குழல் விரித்து அரற்றும் பூசலார்
இனம் தொடர்ந்து உடன்வர எய்தினாள் அரோ
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 6.36.226

அரக்கியர் அரற்றும் ஓசை

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன்னுயிர்
புரக்கும் நன்குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்
அரக்கியர் வாய்திறந்து அரற்றும் ஓதையே. 6.36.227

மேலும் அரக்கியர் வருதல் (10072-10073)

நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ
கோபுரந் தொறும் புறம் குறுகினார் சிலர்;
‘ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம் ‘எனா
மாபுரம் தவிர விண்வழிச் சென்றார்சிலர். 6.36.228

அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட
குழை பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட
உழைப்பொலி உண்கண் நீர்த்தாரை மீது உக
மழைப்பெருங் குலமென வான்வந்தார் சிலர். 6.36.229

அரக்கியர் இராவணன்மேல் வீழ்ந்து அழுதல் (10074-10078)

தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரைநீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்துவந்து,
அலைமிசைக் கடலின்வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 6.36.230

தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும்
குழுவினர் முறைமுறை கூறுகூறு கொண்டு
அழுதனர் அயர்த்தனர் அரக்கி மார்களே. 6.36.231

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்,
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார்
‘திருத்தமே ‘என அவன் சிகரத் தோள்கள்மேல். 6.36.232

இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர்
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர்
முயக்கு இயல் முறைகெட முயங்கினார்கள் தம்
துயக்கு இலா அன்புகண்டு எவரும் சோரவே. 6.36.233

'அறம்தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ? ‘என இரங்கி, ஏங்கினார். 6.36.234

மண்டோதரி இராவணன்மேல் விழுந்து அழுதல் (10079-10087)

தரங்கநீர் வேலையில் தடித்து வீழ்ந்து என
உரங்கிளர் மதுகையான் உருவின் வீழ்ந்தனள்
மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து
இரங்கினள் மயன்மகள் இனைய பன்னினாள். 6.36.235

‘அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு
        அடுத்தது! நான் அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன்பிடித்திருந்த
        கருத்ததுவும் பெற்றிலேனே!
முன்னேயோ விழுந்ததுவும் முடித்தொகையோ?
        படித்தலைய முகங்கள் தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த
        பரிசு! இதுவோ பாவம்! 6.36.236

‘வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த
        திருமேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடனின்றி, உயிர் இருக்கும் இடன்நாடி,
        இழைத்தவாறோ?
“கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனம்
        சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் ‘‘ எனக் கருதி, உடல் புகுந்து,
        தடவியதோ ஒருவன் வாளி? 6.36.237

‘ஆரம்போர் திருமார்பை அகல் முழைகள் எனத்
        திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம்போயின, ஒருவன் சிலைதுரந்த சரங்களே;
        போரில் தோற்று,
வீரம்போய், உரம்குறைந்து, வரம்குறைந்து, வீழ்ந்தானே!
        வேறே! கெட்டேன்!
ஓர் அம்போ, உயிர்பருகிற்று, இராவணனை!
        மானுடவன் ஊற்றம் ஈதோ! 6.36.238

‘காந்தையருக்கு அணியனைய சானகியார் பேர்
        அழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை
        இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார் பணியினால் வெம்
        கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந்
        தவமாய்ப் போயிற்று, அம்மா! 6.36.239

"தேவர்க்கும், திசை கரிக்கும், சிவனார்க்கும்,
        அயனார்க்கும், செங்கண்மாற்கும்,
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி? ‘‘
        என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந்தவத்தின் பெருங்கடற்கும்,
        வரமென்று ஆன்ற
காவற்கும் வலியான் ஒர் மானுடவன் உளன்
        என்னக் கருதினேனோ? 6.36.240

அரைகடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும்
        பேர் அறிஞர்க்கேயும்
உரைகடை இட்டு அளப்பு அரிய பேர் ஆற்றல்
        தோளாற்றற்கு உலப்போ இல்லை
திரைகடை இட்டு அளப்ப அரிய வரமென்னும்
        பாற்கடலைச் சீதை என்னும்
பிறகடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ,
        தவப்பயனின் பெருமை பார்ப்பேன்? 6.36.241

‘ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண்புக்கார்; கண்புக்க வேழ வில்லால்
நார நாண் மலர்க்கணையால், நாளெல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வலத்தினாலே! 6.36.242

ஆரா அமுதாய் அலைகடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனைநான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 6.36.243

மண்டோதரி இராவணன் உடலைத் தழுவி உயிர்விடுதல்

என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவித் தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 6.36.244

கணவனோடு மாண்ட மண்டோதரியை மாதர்கள் வாழ்த்துதல்

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும் தவப் பாலவர்
ஆன மங்கையரும் அருங் கற்புடை
மான மங்கையர் தாமும் வழுத்தினார். 6.36.245

வீடணன் இராவணனுக்கு ஈமக்கடன் புரிதல் (10090-10093)
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை
வன்னி கூவி வரன்முறையால் மறை
சொன்ன ஈமம் விதிமுறையால் தொகுத்து
இன்னல் நெஞ்சினொடு அஞ்சலித்து ஏற்றினான். 6.36.246

இந்தனத்து அகில் சந்தனமிட்டு மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து
எந்த ஓசையும் கீழ் உற ஆர்த்து இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்குற. 6.36.247

கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து
உற்ற ஈம விதியின் உடன்பட
சுற்றம் மாதர் தொடர்ந்து உடன்சூழ்வர
மற்ற வீரன் விதியின் வழங்கினான். 6.36.248

கடன்கள் செய்து முடித்து கணவனை
உடன் தொடர்ந்த மயன்மகேளாடு உடன்
அடங்க வெங்கனலுக்கு அவி ஆக்கினான்
குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான். 6.36.249

மற்றையரக்கர்க்கும் உரிய கடன்களைச் செய்து வீடணன் இராமனை அணுகுதல்

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து
உற்ற தீக் கொடுத்து உண்குறு நீர் உகுத்து
‘எற்றையோர்க்கும் இவன் அலது இல் ‘எனா
வெற்றிவீரன் குரைகழல் மேவினான். 6.36.250

வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும்
‘சிந்தை வெந்துயர் தீருதி தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம் ‘எனா
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 6.36.251
---------------

6.37 மீட்சிப் படலம் 10098 – 10454 (357)

வீடணனுக்குத் தேறுதலுரை பகர்ந்த இராமன், இலக்குவனை நோக்கி ‘நீ வீடணனுக்கு முடிசூட்டுவாயாக ‘என ஏவுதல்
‘வருந்தல் நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்! ‘எனா
அருந்தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான். 6.37.1

‘சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரோடு ஏகி நீ
ஆதிநாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடுமுடி சூட்டுவாய் 6.37.2

என்று கூறி இளவெளாடு யாரையும்
வென்றிவீரன் விடை அருள் வேலையில்
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று தம்தம செய்கை புரிந்தனர். 6.37.3

முடிசூட்டுதற்கு அமரர்கள் ஆவனசெய்தல்

சூழ் கடல் புனலும் பல தோயமும்
நீள் முடித் தொகையும் பிறநீர்மையும்
பாழி துற்று அரி பற்றிய பீடமும்
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 6.37.4

வாசநாள் மலரோன் சொல மான்முகன்
காசும் மாநிதியும் கொடு கங்கைசூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட
தேசு உலாம் மணிமண்டபம் செய்தனன். 6.37.5

இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டுதல்

மெய்கொள் வேத விதிமுறை விண் உேளார்
தயெ்வ நீள்புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6.37.6

வீடணன் அரியணையில் அமர்ந்திருத்தல்

கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்து என்னவே
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான் தமர் ஆர்த்து எழ. 6.37.7

தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரைமலர் வேறு இலா
மூவரோடு முனிவர் மற்று யாவரும்
நாவில் ஆசி நறைமலர் தூவினார். 6.37.8

மூடிசூடிய வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து இராமபிரானை யெய்தி இறைஞ்சுதல்

முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை ஆண்டை அந்
நெடிய காதலினோற்கு உயர் நீர்மை செய்து
இடிகொள் சொல்லன் அவற்கு இது இயம்பினான். 6.37.9

‘விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மாநகர் யான்வரும் எல்லைநீ
கலங்கலா நெடுங்காவல் இயற்று ‘எனா
அலங்கல் வீரன் அடியிணை எய்தினான். 6.37.10

வணங்கிய வீடணனை இராமன் தழுவிக்கொண்டு அவனுக்கு நீதிகளை எடுத்துரைத்தல்

குரக்கு வீரன் அரசு இளங்கோளரி
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்
பொருக்கெனப் புகல் புக்கவன் புல்லி அத்
திருக்கொள் மார்பன் இனையன செப்பினான். 6.37.11

‘உரிமை மூவுலகும் தொழ உம்பர்தம்
பெருமை நீதி அறன்வழிப் பேர்கிலாது
இருமை ஏய் அரசு ஆளுதி ஈறு இலாத்
தருமசீல! ‘என்றான் மறை தந்துளான். 6.37.12

பன்னும் நீதிகள் பற்பல கூறி ‘மற்று
உன் அடைந்தவரோடு உயர் கீர்த்தியே
மன்னி வாழ்க ‘என்று உரைத்து அடல்மாருதி
தன்னை நோக்கினன் தாயர்சொல் நோக்கினான். 6.37.13

சீதைக்குச் செய்தி சொல்லி வருமாறு, இராமன், அனுமனை அனுப்புதல்

இப்புறத்து இ(ன்)ன எய்துறு காலையில்
அப்புறத்தை உன்னி அனுமனை
‘துப்பு உறு அச் செய்யவாய் மணித்தோகைபால்
செப்புறு இப்படிப் போய் ‘எனச் செப்பினான். 6.37.14

அனுமன் அசோகவனம் சென்று, பிராட்டியைத் தொழுது சோபனம் பாடி இராமனால் இராவணன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறுதல்

வணங்கி அந்தமில் மாருதி மாமலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர்வரு நீர் என
சுணங்கு தோய்முலையாட்கு இவை சொல்லுவான். 6.37.15

பாடினான் திருநாமங்கள்; பல் முறை
கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான். 6.37.16

‘ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்!
வாழி சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது சோபனம்! 6.37.17

‘தலை கிடந்தன தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித்தோள் எனும்
அலை கிடத்தன; ஆழி கிடந்தனெ
நிலைகிடந்தது உடல் நிலத்தே ‘என்றான். 6.37.18

‘அண்ணல் ஆணையின் வீடணனாம் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்
பெண் அலாது பிழைத்து உளது ஆகும் என்று
எண்ணல் ஆவது ஒர்பேர் இலதால் ‘என்றான். 6.37.19

செய்திகேட்டுச் சீதை மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல்

ஒரு கலைத்தனி வெண்மதி நாெளாடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலை குலம் பூத்தது போன்றனள்
பருகல் உற்ற அமுது பயந்த நாள். 6.37.20

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பு நுண் இடை நோவ திரள்முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டிவந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள். 6.37.21

10118. 6.37.புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ
உந்தி ஓங்கும் ஒளிவளைத் தோள்கொலோ
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ
முந்தி ஓங்கின யாவை முலைகொலோ? 6.37.22

குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மைவேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;
கனித்த இன்களி கள்ளினில் காட்டுமோ? 6.37.23

களிப்பின் மிகுதியால் ஒன்றும் பேசமாட்டாது பிராட்டியிருந்தாளாக, ‘ஒன்றும் பேசாதது ஏன்? ‘என அனுமன் வினவுதல்

அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள். 6.37.24

‘யாது இதற்கு ஒன்று இயம்பலை என்பது,
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ? ‘ எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள். 6.37.25

பிராட்டியின் மறுமொழி
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கம் உற்று “ஒன்று இயம்புவது யாது? ” என
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன்;
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? 6.37.26

‘முன்னை “நீக்குவென் மொய்சிறை ” என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை;
“என்ன பேற்றினை ஈகுவது? ” என்பதை
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் 6.37.27

‘உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவுந் தகும் தன்மையோய்! 6.37.28

‘ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்;
“யாது செய்வது? ” என்று எண்ணி இருந்தனென்
வேத நல்மணி வேகடம் செய்து அன்ன
தூத! என் இனிச் செய்திறம்? சொல் ‘என்றாள். 6.37.29

அனுமன் தான் விரும்பிய பணி இதுவெனக் கூறுதல்

‘எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி! நின்
மனக்களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?
புனக் களிக்குல மாமயில் போன்றுளாய்! 6.37.30

நின்னை வருத்திய கொடிய அரக்கியரை யான் வருத்தும்படி எனக்கு அனுமதி தருக ‘என அனுமன் பிராட்டியை வேண்டுதல்

என உரைத்து ‘திரிசடையாள் எம்மோய்!
மனவினில் சுடர் மாமுக மாட்சியாள்
தனை ஒழித்து இவ் அரக்கியர் தங்களை
வினையினின் சுட வேண்டுவன் யான் ‘என்றான். 6.37.31

‘உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, ‘ விழுங்குவம் ‘என்றுளார்
வரைசெய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி ‘என்னுமால். 6.37.32

அனுமன் சொல்லிய சொல்லினைக் கேட்ட அரக்கியர் சீதையைச் சரண்புகுதல்

‘குடல் குறைத்து, குருதி குடித்து இவர்
உடல் முருக்கியிட்டு உண்குவென் ‘என்றலும்,
அடல் அரக்கியர் ‘ அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச்சரண் ‘ என்று விளம்பலும். 6.37.33

பிராட்டி அரக்கியர்க்கு அபயம் அளித்து, அனுமனை நோக்கி, ‘அவர்களுக்கு இடர்செய்யற்க ‘என இரந்து வேண்டுதல்

அன்னை ‘அஞ்சல்மின்! அஞ்சல்மின்! நீர் ‘எனா
மன்னும் மாருதி மாமுகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது? தூய்மையோய்! 6.37.34


‘யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது; தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அ(ல்)லரே இவர்?
போன அப்பொருள் போற்றலை புந்தியோய்! 6.37.35

‘எனக்கு நீ அருள் இவ் வரம்; தீவினை
தனக்கு வாழ்வு இடமாய சழக்கியர்
மனக்கு நோய்செயல் ‘என்றனள்; மாமதி
தனக்கு மா மறு தந்த முகத்தினாள். 6.37.36

பிராட்டியின் அருள் நினைந்து அனுமன் பணிதலும்

என்ற போதின் இறைஞ்சினன் ‘எம்பிரான்
தன்துணைப் பெருந்தேவி தயா ‘எனா
நின்ற காலை நெடியவன் ‘வீடண!
சென்று தா நம தேவியைச் சீரொடும் 6.37.37

வீடணன் சென்று பிராட்டியின் திருவடிகளை வணங்குதல்

என்னும்காலை இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும்காலைக் கொணர்தி ‘என்று ஓதும் அப்
பொன்னின் கால்தளிர் சூடினன் போந்துளான். 6.37.38

வீடணன் பிராட்டியை நோக்கி, ‘பூணத்தக்ககோலம் புனைந்து இராமன்பக்கல் எழுந்தருள்க எனக் கூறுதல்

‘வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் வேதன், நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
“பூண்தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி,
ஈண்டு, கொண்டணைதி ‘‘ என்றான்; எழுந்தருள் இறைவி ‘என்றான். 6.37.39

அணி புனைந்துகொள்ளாமல் இங்கிருந்த கோலத்துடன் வருதலே எனக்குத் தகுதி என்று சீதை கூறுதல்

‘யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது அன்று; வீர! ‘ 6.37.40

அணி புனைந்து வருதல்வேண்டும் ‘என்பது இராமனது கட்டளை என வீடணன் வற்புறுத்திக் கூறப் பிராட்டி அதற்கிசைந்தநிலையில் தேவமாதர்கள் பிராட்டியை நீராட்டிக் கோலஞ்செய்தல்

என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், ‘நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு அது ‘என்றான்;
‘நன்று ‘என, நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வானநாட்டுத் திலோத்தமை முதலோர், சேர. 6.37.41

மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நானம் நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார். 6.37.42

காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேணுயர் மறையை எல்லாம் முறைசெய்த செல்வன் என்ன,
வேணியை, அரம்பை, மெல்ல, விரல்முறை சுகிர்ந்து விட்டாள். 6.37.43

பாகு அடர்ந்து அமுது பில்கும் பவளவாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண்சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாட, ஆட்டினர், உம்பர் மாதர். 6.37.44

உருவிளை பவள வல்லி பால்நுரை உண்ட தனெ்ன
மருவிளை கலவை ஊட்டிக் குங்குமம் முலையின் மாட்டி,
கருவிளை மலரின் காட்சிக் காசு அறு தூசும் காமர்
திருவிளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் சேர்த்தார் 6.37.45

தேவமாதர் பிராட்டிக்கு மங்கல ஆரத்திசுழற்றிக் காப்பிடுதல்

சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம்பூண்,
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ்வாய்த் தேம்பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து காப்பும் இட்டார். 6.37.46

பிராட்டியை விமானத்திலேற்றி இராமனிடம் அழைத்துச் செல்லுதல்

மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து என்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறஞ்சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளின் சென்றான். 6.37.47

தேவர்களும் முனிவர்களும் தேவர்மகளிரும் முனிவர் மனைவியரும் பிராட்டியைக் காணுதற்கு நெருங்குதல்

இப்புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உறச் சிவந்தவாய் விஞ்சைத் தோகையர்
முப்புறத்து உலகினும் எண்ணின் முற்றினார்
ஒப்புறக் குவிந்தனர் ஓகை கூறுவார். 6.37.48

மிகப்பலராய் நெருங்கியவர்களை அரக்க வீரர்கள் அடித்து விலக்க அவர்கள் அரற்றுதல்

அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்குபின் முன்செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால்
கருங்கடல் முழக்கு எனப் பிறந்த கம்பலை. 6.37.49

அரற்றொலியைக் கேட்ட இராமன், அதற்குக் காரணம் யாது என முனிவர்களை வினவியறிதல்

அவ்வழி, இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்விவாள் முகம்கொடு செயிர்த்து நோக்கு உறா,
‘இவ்வொலி யாவது? ‘என்று இயம்ப, ‘இற்று ‘எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. 6.37.50

இராமன் வீடணனைக் கடிந்துரைத்தல்

முனிவரர் வாசகம் கேட்புறாத முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன்
தனை எழ நோக்கி ‘நீ தகாத செய்தியோ
புனிதநூல் கற்று உணர் புந்தியோய்? ‘என்றான். 6.37.51

‘கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால்
நெடுந் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அணைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? கருது நூல்வலாய்! 6.37.52

‘பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து அண்ணல்,
அரசுடைத் தரெிவைமாரை இன்றியே அமைவது உண்டோ?
கரைசெயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசு உறின், விலக்குவாரோ? வேறு உளார்க்கு என்கொல்? வீர! 6.37.53

இராமன் சொல்லைக்கேட்டு வீடணன் அஞ்சி நடுங்கி நிற்றல்

‘ஆதலால், அரக்கர் கோவே! அடுப்பது அன்றும் உனக்கும், இன்னே
சாதுவாம் மாந்தர் தம்மைத் தடுப்பது ‘என்று அருளி, செங்கண்
வேத நாயகன் தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன், குணங்கள் தூயோன். 6.37.54

போர்க்களத்தையடைந்த சீதை, இராமபிரானது கோலத்தைக்கண்டு அனுமன் செய்த உதவியை நினைந்து பாராட்டுதல்

அருந்ததி அனைய நங்கை, அமர்க்களம் அணுகி, ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப்பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி,
கருந்தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய சொன்னாள். 6.37.55

‘சீலமும் காட்டி, என்கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என்குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா
காலமும் காட்டுங்கொல் எனது கற்பு? என்றாள். 6.37.56

பிராட்டி இராமனது திருமேனியைக் காணுதல்

‘எச்சில் என்னுடல் உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை ‘என்பது ஓர் நவை இலாள் எதிர்
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச்சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். 6.37.57

சீதை விமானத்திலிருந்து இறங்கி, இராமனைத் தொழுது ஏக்கம் நீங்குதல்

மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்
போனபேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தானது கவர்வுறும் தன்மைத்து ஆம் என
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள். 6.37.58

பிறப்பினும் துணைவனை பிறவிப் பேரிடர்
துறப்பினும் துணைவனை தொழுது ‘நானினி
மறப்பினும் நன்று; இனிமாறு வேறுவீழ்ந்து
இறப்பினும் நன்று ‘என ஏக்கம் நீங்கினாள். 6.37.59

இராமன் சீதையை அமைய நோக்குதல்

கற்பினுக்கு அரசினை பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான். 6.37.60

இராமன், தன்னை வணங்கிய சீதையைச் சினந்து நோக்கிப் பலவாறு கடிந்துரைத்தல்

சுணங்கு உறுதுணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடும் கண் நீர் ஆறு வார்வுற
வணங்கிய மயிலினை கற்பின் வாழ்வினை
பணம்கிளர் அரவு என எழுந்து பார்ப்பு உறா. 6.37.61

‘ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறைதிறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என்? நினைவு, “எனை விரும்பும் “ என்பதோ? ‘ 6.37.62

‘உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டு உறு படை அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறுபகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான் பொருட்டு, இலங்கை எய்தினேன் 6.37.63

‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான்தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே இனிது? எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை வெறுமை நீங்கினாய்! 6.37.63

‘கலத்தினின் பிறத்த மாமணியின் காந்துறு
நலத்தினின் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 6.37.64

‘பெண்மையும் பெருமையும், பிறப்பும் கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 6.37.65

‘அடைப்பர், ஐம்புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப்பரம் புனைந்து, ஒளிர் தகையின் மாதவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழிவந்தால், அது
துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகைமார். 6.37.66

‘யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஒர்நெறி
போதியால் ‘என்றனன் புலவர் புந்தியான். 6.37.67

இராமன் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு அங்கு நின்ற முனிவர் முதலியோர் அனைவரும் அரற்றுதல்
முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும் நிருதர் என்று உளார்
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார்
அனைவரும் வாய்திறந்து அரற்றினார் அரோ. 6.37.68

இராமன் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்ட சீதையின் துயர்நிலை
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினைக் கோலுறுத் தனைய பொம்மலால்
உள்நினைப்பு ஓவிநின்று உயிர்ப்பு வீங்கினாள். 6.37.69

பருந்து அடர் சுரத்திடை பருகுநீர் நசை
வருந்து அரும் துயரின் ஆல் மாளலுற்ற மான்
இருந் தடம்கண்டு அதின் எய்துறா வகைப்
பெருந்தடை உற்று என பேதுற்றாள் அரோ. 6.37.70

உற்றுநின்று உலகினை நோக்கி ஓடு அரி
முற்று உறு நெடுங்கண்நீர் ஆலிமொய்த்து உக
‘இற்றதுபோலும் யான் இருந்துபெற்ற பேறு?
உற்றதால் இன்று அவம் ‘என்று என்று ஓதுவாள். 6.37.71

‘மாருதி வந்து எனைக் கண்டு “வள்ளல்நீ
சாருதி ஈண்டு “ எனச் சமையச் சோல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ
சோரும் என்நிலை? அவன் தூதும் அல்லனோ? 6.37.72

‘எத் தவம் என்நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனலாய் அவம் பிழைத்ததாம் அன்றே
உத்தம! நீமனத்து உணர்ந்திலாமையால். 6.37.73

‘பார்க்கு எலாம் பத்தினி; பதுமத் தானுக்கும்
பேர்க்கலாம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், ‘அன்று ‘என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தயெ்வம் தேறுமோ? 6.37.74

‘பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்குகைத் தாங்கிய தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மனநிலை உணர வல்லரோ? 6.37.75

‘ஆதலின் புறத்து இனி யாருக்காக என்
கோது அறுதவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே
வேத! நின்பணி; அதுவிதியும் ‘என்றனள். 6.37.76

சீதை தனக்குத் தீ அமைக்குமாறு இலக்குவனை வேண்ட அவன் இராமனைத் தொழுது குறிப்பினால் அவனது இசைவை உணர்தல்

இளையவன் தனை அழைத்து ‘இடுதி தீ ‘என
வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான். 6.37.77

இலக்குவன் தீ அமைக்க, சீதை அதனருகே செல்லுதல்

ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதிமுறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள். 6.37.78

அப்பொழுது உலகில் எல்லாப் பகுதிகளும் எல்லாவுயிர்களும் கலக்கமுற்று நடுங்குதல்

தீ இடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக்குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய்திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். 6.37.79

வலம்வரும் அளவையின் மறுகி வான்முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலமரல் உற்றன; அலறி ஐய! இச்
சலம் இது தக்கிலது ‘என்னச் சாற்றின. 6.37.80

இந்திரன் தேவியே முதல ஏழையர்
அந்தர வானின் நின்று அரற்றுகின்றவர்
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். 6.37.81

நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படிசுமந்த பாம்பு; வாய்
விடம் பரந்து உளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன சுடர்; கடல்கள் ஏங்கின. 6.37.82

யான் குற்றமுடையேன் தீச்செல்வா என்னைச் சுடுதி ‘என்று அக்கினியை நோக்கிக் கூறி, இராமனுக்கு வணக்கஞ் செலுத்தி, தீயிற் பாய்தல்

கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால், ‘தீச்செல்வா! ‘என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். 6.37.83

சீதையின் கற்புத் தீயினால் அக்கினி வெந்து தீய்தல்

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும் பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால். 6.37.84

தீக்கடவுள் சீதையைக் கையிலேந்தி

அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன் அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் துணைக் கரத்தினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். 6.37.85


ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடின இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால். 6.37.86

அப்பொழுது உலகம் தடுமாற்றம் ஒழிய யாவரும் மகிழ்தல்

திரிந்தன உலகமும் செவ்வை நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார். 6.37.87

அங்கியங் கடவுள் இராமனை நோக்கி முறையிடுதல்

‘கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால்
நினைந்திலை என் வலி நீக்கினாய் ‘எனா
அநி்ந்தனை அங்கி ‘நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் ‘என முறையிட்டான் அரோ. 6.37.88

இராமன் ‘நீ யார்? ‘என வினாதல்
‘இன்னது ஓர் காலையில், இராமன், ‘யாரை நீ?
என்னை நீ இயம்பியது? எரியுள் தோன்றி, இப்
புன்மைசால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்,
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால் ‘என்றான். 6.37.89

அக்கினிதேவன் மறுமொழி
‘அங்கி, யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந்தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை நோக்கியும்,
சங்கியா நிற்றியோ, எவர்க்கும் சான்று உளாய்? 6.37.90

‘வேட்பதும், மங்கையர் விலங்கினார் எனின்
கேட்பதும், பல்பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் ‘ என்னும் மெய்ப் பொருள்
வாள் பெருந் தோளினாய்! மறைகள் சொல்லுமால். 6.37.91

‘ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கை உறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய் உறு கட்டுரை கேட்டும் மீட்டியோ?
பொய் அறு மாருதி உரையும் போற்றலாய்! 6.37.92

‘தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதிநின்று,
“ஆ! “ எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒருபொருள் யாண்டுக் கொண்டியோ? 6.37.93

‘பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வையுமேல், மலர் மிசை அயனும் மாயுமே. ‘ 6.37.94

பிராட்டியை இராமன் அருகில் அக்கினிதேவன் கொண்டுவர இராமன் அவளை ஏற்றுக்கொள்ளுதல்

பாடு உறு பல்மொழி இனைய பன்னி நின்று
ஆடு உறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனி அ(வ்) அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான். 6.37.95

‘அழிப்பு இல சான்றுநீ, உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, “யாதும் ஓர்
பழிப்பு இலள் ‘‘ என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள் ‘என்றனன் கருணை உள்ளத்தான். 6.37.96

தேவர்கள் வேண்டியவண்ணம் பிரமதேவன் இராமனது உண்மைநிலையை அவனுக்கு உணர்த்துதல்
‘உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை புணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு ‘என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான். 6.37.97

‘மன்னர் தொல்குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை; நின் இன் இல் வேறு உளது இலை நெடியோய்! 6.37.98

‘பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன்பெரு மாயையினால் வந்த வீக்கம். 6.37.99

‘முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன்பெருந் தன்மை தான் தரெி மறைகளின் தலைகள்,
“மன்பெரும் பரமார்த்தம் “ என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா. 6.37.100

‘எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன்
தனக்கும், பல்பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்,
வினைத் துவக்கு உடை வீட்ட அரும் தளைநின்று மீள்வார். 6.37.101

என்னைத்தான் முதலாகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையின் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின் சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 6.37.102

“‘ஐ அஞ்சு ஆகிய தத்துவம் தரெிந்து அறிந்து, அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது ‘‘ என்னும் ஈது அருமறை புகலும்;
வையம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை, வழக்கால். 6.37.103

‘அளவையால் அளந்து, “ஆம் “ , “அன்று “என்று அறிவுறும் அமைதி
உ(ள்)ளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உறும் நின்
களவை ஆய்ந்து உறத் தெளிந்து இலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! “உளை நீ “ எனத் துணியும். 6.37.104

‘கரணம் என்று உள உன்னை வந்து அறிவு காணாமே,
அரணம் அல்லவர்க்கு இவை கடந்து அறிவு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான். 6.37.105

'தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல்சால் முதற்பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்,
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். 6.37.106

'மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால். 6.37.107

‘என் உருக் கொடு இவ் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக் கொடு புகுந்துநின்று ஓம்புதி; உமைகோன்
தன் உருக்கொடு துடைத்தி; மற்று இது, தனி அருக்கன்
முன் உருக் கொடு பகல் செயும் தரத்தது முதலோய் 6.37.108

'திருக் குவால்மலி செல்வத்துச் செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம்புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி; ஈங்கு இது கடனோ? 6.37.109

‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உன்னை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இருவினை உகுப்போர்;
“ஓங்காரப் பொருள் ஆம் “ , “அன்று “என்று, ஊழி கண்டாலும்
ஓங்காரப் பொருளே பொருள் என்கிலா உரவோர் 6.37.110

‘இனையது ஆதலின், என்னையும் யாரையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனியல் ‘என்று உரை முடித்தனன் முந்துநீர் முளைத்த
சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன். 6.37.111

சிவபெருமான் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்
என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
‘உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்திநீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள். 6.37.112

'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன்வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல உயிர்; இராமன் நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது ‘என்றனன், வரதர்க்கும் வரதன். 6.37.113

இராமனைத் தரெுட்டுமாறு துறக்கத்திலுள்ள தயரதனுக்குச் சிவபெருமான் பணித்தல்

பின்னும் நோக்கினான், பெருந்தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, நின் மைந்தனைத் தரெுட்டி
முன்னை வன்துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான். 6.37.114

தயரதன் பூதலத்திடைப் புகுதலும், இராமன் அவனை வணங்குதலும்

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேதவேத்தனும் அவன் மலர்த் தாள்மிசை வீழ்ந்தான். 6.37.115

தயரதன் இராமனை இடர்நீங்க எடுத்துத் தழுவி மகிழ்ந்துரைத்தல்

வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன் கண்ணின் நீர் ஆட்டி,
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று இவை புகன்றான். 6.37.116

‘அன்று கேகயன் மகள் கொண்ட வரமெனும் அயில்வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்றும் நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலம் பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க. 6.37.117

‘மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என்துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும்பெற்று உயர்ந்தேன். 6.37.118

‘பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி;
புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி
அண்ட மூலத்து ஒர் ஆசனத்து இருத்தினை, அழக! ‘ 6.37.119

தயரதன் சீதையை யணுகித் தன்னை வணங்கிய சீதைக்குத் தேறுதலுரை பகர்தல்

என்று மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக்கழல் வணங்கலும், கருணையால் தழவி
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும்புகழோன். 6.37.120

“‘நங்கை! மற்றுநின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கி புக்கிடு ‘‘ என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு, அதுசரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 6.37.121

“‘பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு ‘‘ என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி ‘ என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது ‘‘ என்று எண்ணி இப்பெரியோன். 6.37.122

‘பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான்நின்றும் வந்தாய்;
எண்பு இறந்த நின்குணங்களுக்கு இனி இழுக்கு இலையால். 6.37.123

தயரதன் இலக்குவனைக் தழுவிப் பாராட்டுதல்

என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திருமனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர்முனிவு இன்மை மனம்கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தன்னைத்தான் எனத் தழுவினன், கண்கள் நீர்ததும்ப. 6.37.124

கண்ணின்நீர்ப் பெருந்தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, ‘மைந்த!
எண் இல் நீக்க அரும்பிறவியும் என்நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, நுமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய் 6.37.125

‘புரந்தரன் பெரும் பகைஞனைப் போர்வென்ற உன்தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீஇந்த உலகின்
அரந்தை வெம்பகை துடைத்து, அறம் நிறுத்தினை ஐய! 6.37.126

என்று, பின்னரும், இராமனை, ‘யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர்குணத்தோய்! ‘ என, ‘உனை யான்
சென்று வானிடைக்கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப்பெற்றேன்; இனிப் பெறுவது என்? ‘என்றான். 6.37.127

‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை ‘என, அழகன்,
‘தீயள் என்று நீ துறந்த என் தயெ்வமும் மகனும்,
தாயும் தம்பியுமாம் வரம் தருக ‘எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி. 6.37.128

தயரதன் மறுமொழி

‘வரதகேள்! ‘எனத் தயரதன் உரை செய்வான்; ‘மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம் ‘என்றான், தழீஇய கைதளர. 6.37.129

கைகேயியின்மேல் தயரதன் கொண்ட தணியாக் கோபம் இராமனது உரையால் நீங்குதல்

'ஊன் பிழைக்கிலா உயிர்நெடிது அளிக்கும்நீள் அரசை
வான்பிழைக்கும் இதுமுதல் எனாது, ஆள்வுற மதித்து
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம்பிராட்டி
தான்பிழைத்தது உண்டோ? ‘என்றான்; அவன் சலம் தவிர்ந்தான் 6.37.130

எவ் வரங்களும் கடந்தவன் அப்பொருள் இசைப்ப,
‘தவெ்வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு ‘என்றார், தேவரும் இரங்கி. 6.37.131

வரமிண்டையும் அளித்த தயரதன் விமானத்திலேறித் துறக்கத்தை யடைதல்

வரம் இரண்டும் அளித்து, அழகனை, இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம்மீது ஏகினன் உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிரளித்து, உறுபுகழ் படைத்தோன். 6.37.132

தேவர்கள் இராமனை நோக்கி ‘வீர நீ வேண்டும் வரம் கேள் ‘என ‘போரில் மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுமாறும் குரங்குகள் செல்லும் வனம் முதலிய இடங்களிற் காய் கனிகள் மிகுமாறும் அருள்புரிக ‘என இராமன் வேண்டுதல்

கோட்டு வார்சிலைக் குரிசிலை அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, ‘வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் ‘என, ‘அரக்கர்கள் கிளர்பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக! ‘என விளம்பி, 6.37.133

பின்னும் ஓர் வரம், ‘வானரப் பெருங்கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம், மால்வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என விளம்பிடுக ‘என்றான். 6.37.134

தேவர்கள் அருளிய வரத்தால், போரில் மாண்ட குரங்குகள் யாவும் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்

வரம் தரும் முதல் மழுவலான், முனிவரர், வானோர்,
புரந்தர் ஆதி, மற்று ஏனையோர், தனித்தனி புகழ்ந்து ஆங்கு
‘அரந்தை வெம்பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்கு இனம் பெறுக! ‘என்றனர், உள்ளமும் குளிர்ப்பார். 6.37.135

முந்தைநாள் முதல் கடைமுறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண்களிப்புற, செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து 6.37.136

கும்ப கன்னனோடு இந்திரசித்து, வெங்குலப் போர்
வெம்பு வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அங்கு வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார். 6.37.137

பரினான்கு ஆண்டுகள் முடிந்தன; நீ பரதனிடம் இன்று சென்று சேர்க ‘என்று தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி நீங்குதல்

‘இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு, 6.37.138

'வஞ்ச இல்லை இவ் அண்டத்தின் “ எனும்படி மடித்த
கஞ்ச நாள்மலர்க் கையினாய்! அன்னைசொல் கடவாது
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. 6.37.139

‘இன்று சென்று, நீ பரதனை எய்தலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றிவீர! நீ போதியால் ‘ என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 6.37.140

இன்றே யான் பரதனைச் சென்றடைதற்குரிய விமானம் உண்டோ? என இராமன் வினவ, ‘உண்டு ‘எனக் கூறி வீடணன் வணங்குதல்
‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் ஆயின்
மாண்டதாம் இனி என்குலம், பரதனே மாயின்;
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ? ‘ என, ‘இன்றே
தூண்டு மானம் உண்டு ‘என்று, அடல் வீடணன் தொழுதான். 6.37.141

வீடணன், புட்பக விமானத்தின் தன்மையைக் கூறி ‘இவ்விமானத்திற் செல்வாய் ‘என, இராமன் அவ்விமானத்தைக் கொணருமாறு பணித்தல்.
‘வாங்கினான் இருநிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் எழுபஃது ஏறினும் ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின் நீ இனிது
பூங்குலா நகர் புகுதி இஞ்ஞான்று ‘ எனப் புகன்றான். 6.37.142

‘இயக்கர் வேந்தனுக்கு அருமறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனமெனத் தூயது, சுரர்கள்
வியக்க வான்செலும் புட்பக விமானமுண்டு ‘என்றே
மயக்கு இலான் சொல, ‘கொணருதி வல்லையின் ‘என்றான். 6.37.143

வீடணன் புட்பகவிமானத்தை விரைந்து கொணர்தல்

அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் ஒலிப்புறக் கஞலக்
கொண்டு அணைந்தனன் நொடியினில், அரக்கர்தம் கோமான். 6.37.144

புட்கவிமானம் வரத், தேவர்கள் பூமழை சொரிதல்

அனைய புட்பகவிமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, ‘இனிநம்
வினையம் முற்றியது ‘என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனைமலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 6.37.145

புட்பகத்தில் இராமனுடன் சீதையும் இலக்குவனும் அமர்தல்

வணங்கு நுண்ணிடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்கு தான் என இருத்தி ‘என்று, ஐயன்மாடு அணைந்தாள்;
மணம்கொள் வேல் இளங் கோள் அரி மானம் மீப்படர்ந்தான். 6.37.146

விமானத்தில் அமர்ந்த இராமன் வீடணன் சுக்கிரீவன் முதலியோரை நோக்கிக் கூறுதல்

அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்,
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனுந் தகைத்தாய்,
விண்தலம் திகழ் விமானம் ஆம் புட்பகம் இதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குணித்தான் 6.37.147

வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
‘தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். 6.37.148

'நீதி ஆறு எனத் தரெிவுறு நிலைமைபெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கைமா நகரினுள் இனி நீ
போதியால் ‘எனப் புகன்றனன் நான்மறை புகன்றான். 6.37.149

'சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம்தொகு
அக்கிரீவனைத் தடிந்து; வெம் படையினால் அசைத்த
மிக்க வானரச்சேனையின் இளைப்பு அற, மீண்டு, ஊர்ப்
புக்கு வாழ்க ‘எனப் புகன்றனன் ஈறு இலாப் புகழோன். 6.37.150

வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதியாம் நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று இம்மொழி புகன்றான். 6.37.151

ஐயன் இம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாளிணை முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலோம், உனை நீங்கின் ‘என்று இனையன உரைத்தார். 6.37.152

‘பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம்பொன்
ஆரமா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள் ‘என்றனர் உள் அன்பு பிணிப்பார். 6.37.153

இராமன் அதற்கு இசைய, யாவரும் மகிழ்தல்

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி, ‘நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்து இருந்தது அப்பரிசு; நும்முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது ‘என்று உரைத்தனன் - பெரியோன். 6.37.154

ஐயன் வாசகம் கேட்டலும் அரிகுலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும் முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச்சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 6.37.155

சுக்கிரீவன் முதலிய எல்லோரையும் விமானத்தில் ஏறுமாறு இராமன் கூற, யாவரும் புட்பகத்தில் ஏறுதல்

அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, ‘வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம் ‘என்று இராகவன் இசைத்தான் 6.37.156

சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மாமதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பக மிசை ஒருசூழல் 6.37.157

பத்து நாலென அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும் வெளியிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன்நிலை மொழிகுவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே? 6.37.158

புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி

எழுபது வெள்ளத் தோரும், இரவி கான் முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும் சூழ,
தழுவுசீர் இளைய கோவும், சனகன்மா மயிலும் போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர 6.37.159

அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்
எண்தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதே போல்,
புண்டரீகக் கண்வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ 6.37.160

இராமன் கட்டளையினால் யாவரும் மனித வடிவங்கொள்ளுதல்
தேனுடை அலங்கல் மோலிச் செங்கதிர்ச் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வெற்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப்பெருந் தலைவர்தாமும்
மானுட வடிவங் கொண்டார், வள்ளல்தன் வாய்மைதன்னால். 6.37.161

விமானம் வடதிசை நோக்கிச் செல்கையில் இராமன் வழியிலுள்ள காட்சிகளைச் சீதைக்குக் காட்டிச் சொல்லுதல்

குடதிசை மறைந்து, பின்னர்க் குணதிசை உதயம் செய்வான்,
வடதிசை அயனம் முன்னி வருவதே கடுப்ப, மானம்,
தடை ஒருசிறிது இன்றாகித் தாவி வான்படரும் வேலை,
படை அமை விழியாட்கு, ஐயன் இவை இவை பகரல் உற்றான் 6.37.162

இலங்கையை வலஞ் செய்து ஏக என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழைவாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண் ‘என, நமன்தன் வாயில்
கலந்திட, ‘ஈங்குக் கண்டாய் சுபாரிசற் கட்டது ‘என்றான். 6.37.163

‘குடதிசை வாயில், வேகக் குன்று அரிந்தவனை வென்ற
விடம்நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது; என்முன்
வடதிசை வாயில்மேல் அவ் இராவணன் மவுலி பத்தும்
உடலமும் இழந்தது இங்கு ‘என்று உணர்த்தி, வேறு உரைக்கல் உற்றான் 6.37.164

சேதுவைக் காட்டி அதன் சிறப்பினை எடுத்துரைத்தல்

நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன் வான் துணை ஆக நட்ட
பின்னை, மாருதி வந்து உன்னைப் பேது அறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது இச்சேது கண்டாய். 6.37.165

மற்று இதன் தூய்மை எண்ணின் மலரயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தரெிவை! யான் என் புகலுகேன்? கேட்டி அன்பால்;
பெற்ற தாய் தந்தையோடு தேசிகன் பிழைத்துச் சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துேளாரும் எதிர்தரின், சுரர்கள் ஆவார். 6.37.166

‘இந்திரற்கு அஞ்சி, மேல்நாள், இருங்கடல் புக்கு, நீங்காக்
கந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது ‘என்றான். 6.37.167

கங்கையோடு, யமுனை, கோதாவிரியொடு களிந்தை சூழ்ந்த
பொங்குநீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே. 6.37.168

ஆவினைக் குரவரோடும் அரு மறை முனிவர் தம்மைப்
பாவையர் குழுவை இன் சொல் பாலரைப் பயந்து தம்மின்
மேவின அவரைச் செற்றோர், விரிகடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார். 6.37.169


மரக்கலம் இயங்க வேண்டி வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனுஞ் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 6.37.170

'நெற்றியின் அழலும் செங்கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையின் மேவும் கங்கையும், “சேது ஆகப்
பெற்றிலம் ‘‘ என்று கொண்டு பெருந் தவம் புரிகின்றாளால்;
மற்று இதன்தூய்மை எவ்வாறு உரைப்பது? மலர்க்கண் வந்தாய்! ‘ 6.37.171

வருணன் சரணமடைந்த இடத்தை இராமன் சீதைக்குக் காட்டுதல்

தவெ் அடு சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ்வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்று, பின் வருணன் நோனாது,
இவ் இடை வந்து கண்டாய், “சரண் “ என இயம்பிற்று என்றான். 6.37.172

பொதியமலை, திருமாலிருஞ்சோலை, திருவேங்கடமலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

‘இது, தமிழ் முனிவன் வைகும் இயல்தரு குன்றம்; முன்நாறு
உது, வளர் மணிமால் ஓங்கல், உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது, திகழ் அனந்தவெற்பு ‘என்று அருள்தர, ‘அனுமன் தோன்றிற்று
எது? ‘என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான். 6.37.173

சுக்கிரீவனது நகரைக் காட்டுதல்

‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர் சூழ்
வேலியைக் கடக்க வாவும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறங்குணித்த மேலோர்
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரு புரம் ஈது ‘என்றான். 6.37.174

வானரமகளிரையும் உடனழைத்துச் செல்லவேண்டும் எனச் சீதை கூறுதல்

‘கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால் : எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து ‘என்றாள். 6.37.175

வானரமகளிரைக் கொணரும்படி இராமன் பணிக்கச் சுக்கிரீவன் சொற்படி அனுமன் அவர்களைக் கொணர்தல்

அம்மொழி இரவு மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர் அனுமன் தன்னை நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம்மலி குழலினாரை மரபினாற் கொணர்தி ‘என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல், கொணர்ந்தனன், சென்று மன்னோ. 6.37.176

வானரமகளிர் சுக்கிரீவனையும் இராமனையும் சீதையையும் வணங்குதல்

வரிசையின் வழாமை நோக்கி, மாருதி, மாதர் வெள்ளம்
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரை செறி குழலினார், தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார். 6.37.177

விமானம் மீண்டும் எழுந்து செல்லுதல்

மங்கலம் முதலாய் உள்ள மரபினின் கலன்கள் யாவும்
அங்கு அவர் கொணர்ந்து, பெண்மைக்கு அரசியைத் தொழுதுசூழ,
நங்கையும் உவந்து, ‘வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள்;
பொங்கிய விமானம் தானும் மனமென எழுந்து போன. 6.37.178

கோதாவரியையும் சீதையைப் பிரிந்த இடத்தையும் இராமன் சீதைக்குக் காட்டுதல்

போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத்தோகையை நோக்கி, ‘முன் தோன்று சூழல்
கோதாவிரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னைப்
பேதாய்! பிரிவித்து உயர் பீழை பிணித்தது ‘என்றான். 6.37.179

தண்டகவனம், சித்திரகூடபருவதம், பரத்துவாசர் ஆச்சிரமம் ஆகியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

'சிரத்து வாச வண்டு அலம்பிடு தரெிவை! கேள் : இதுநீள்
தரத்து உவாசவர், வேள்வியர் தண்டகம்; அது தான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திர கூடம்;
பரத்துவாசனது உறைவிடம் இது ‘எனப் பகர்ந்தான். 6.37.180

பரத்துவாச முனிவர் இராமனை எதிர்கொள்ளுதல்

மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
‘என்னை ஆளுடை நாயகன் எய்தினன் ‘என்னா,
துன்னு மாதவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான் 6.37.181

இராமன் பரத்துவாச முனிவரைக் காணுதல்

ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப்பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 6.37.182

பரத்துவாசர் ஆச்சிரமத்தில் புட்பக விமானம் இறங்குமாறு இராமன் நினைதல்

எண்பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 6.37.183

இராமன் விரைந்து எதிர்சென்று பரத்துவாச முனிவரை வணங்குதல்

உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தனெப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மாமறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 6.37.184

பரத்துவாச முனிவர் நல்வாழ்த்துடன் இராமனைத்தழுவி உவகைக்கண்ணீர் சொரிதல்

அடியின் வீழ்தலும், எடுத்து நல் ஆசியோடு அணைத்து
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன் 6.37.185

சீதையும் இலக்குவனும் முனிவரை வணங்க, அவர் பரிவால் உளம் மகிழ்தல்

கருகும் வார்குழல் சனகியோடு இளவல் கைதொழுதே,
அருகு சார்தர, அருந்தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 6.37.186

வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன்மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அருமறை புகன்றே. 6.37.187

பரத்து வாசமுனிவர் இராமனை அருச்சித்து அன்போடு உபசரித்து அவனது சிறப்பினை எடுத்துரைத்தல்

பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்து, பின் சூரியன் புதல்வன்
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஓர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன். 6.37.188

‘முனிவர் வானவர் மூவுலகத்து உேளார் யாரும்
துனி உழந்திடத் துயர்தரு கொடுமனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? 6.37.189

'விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவு அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய் ஐய! ‘ 6.37.190

இன்று எம் விருந்தாக இங்குத்தங்குக ‘எனப்பரத்துவாச முனிவர் இராமனை வேண்டுதல்

‘சித்திர கூடம் தீர்ந்து, தனெ்திசைத் தீமை தீர்த்திட்டு
இத்திசை அடைந்து எம் இல்லின் இறுத்தமை இறுதி ஆக
வித்தக! மறந்திலேன் யான் விருந்தினை ஆகி, எம்மோடு
இத்தினம் இருத்தி ‘என்றான் மறைகலின் இறுதி கண்டான். 6.37.191

பரதன் இயல்பினை இப்பொழுதே சொல்கின்றேன் ‘என முனிவர் இராமனிடம் பரதன் தன்மையை எடுத்துரைத்தல்

'கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங்கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவன் கேட்டி ‘என்றான். 6.37.192

வியர்த்த மேனியன், விழிபொழி மழையன், மூவினையைச்
செயிர்த்த சிந்தையன், தரெுமரல் உழந்து உழந்து அழிவான்,
அயர்த்து நோக்கினும் தனெ்திசை அன்றி வேறு அறியான்,
பயத்த துன்பமே உருவு கொண்டு என்னல் ஆம் படியான். 6.37.193

'இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான், பழம் பதி புகாது,
நந்தியம் பதி இருந்தனன், பரதன், நின் நாமம்
அந்தியும் பகல் அதனினும் மறப்பு இலன் ஆகி 6.37.194

பரத்துவாச முனிவர் இராமனைப் பாராட்டிக்கூற, இராமன் முனிவரைப் போற்றுதல்

என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும் இறுத்த வீர!
நின்தனைப் பிரிந்தது உண்டே யான்? ‘என நிகழ்தினனால். 6.37.195

பரத்துவாசர் இராமனை நோக்கி ‘நீ விரும்பிய வரத்தைத் தருவேன் ‘எனக்கூற, இராமன் வானரங்கள் சென்ற விடமெல்லாம் வளம்பெற்று வாழும் வரத்தினை வேண்டிப்பெறுதல்

‘மின்னை ஏய் உழையினானும் விரை மலர்த் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி உன்தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தர் யான் அலாது இல்லை ‘என்றான். 6.37.196

அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன் கேட்டி வேண்டிற்று
எவ் வரம் எனினும் தந்தேன் இயம்புதி ‘எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க ‘. 6.37.197

‘அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும், வானம்
சொரிதரு பருவம் போன்று, கிழங்கொடு கனிகாய் துன்றி,
விரிபுனல் செழுந்தேன் மிக்கு விளங்க என விளம்புக ‘என்றான்;
புரியும் மாதவனும், ‘அஃதே ஆக ‘எனப் புகன்றிட்டானால். 6.37.198

பரத்துவாச முனிவர், அங்கு வந்தோர் அனைவர்க்கும் விருந்தளித்தல்

அருந்தவன், ‘ஐய! நின்னொடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென் ‘என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்
புரிந்து ஒர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 6.37.199

அப்பொழுது இராமன் அனுமனை நோக்கி ஒன்று கூறத் தொடங்குதல்

அரைசரே ஆதி ஆக, அடியவர் அந்தம் ஆக,
கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி அறுசுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன், அனுமனை விளித்துச் சொன்னான். 6.37.200

‘இன்று நாம்பதி ஏகுமுன் மாருதி! ஈண்டச்
சென்று தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி
நின்ற காலையின் வருதும் ‘என்று ஏயினன், நெடியோன்;
‘நன்று ‘எனா, அவன் மோதிரம் கைக்கொடு நடந்தான். 6.37.201

அனுமன் விரைந்து வான்வழிச் செல்லுதல்

தந்தை வேகமும், தனது நாயகன் தனிச்சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின்வரச் செல்பவன், குகற்கும் அச்சேயோன்
வந்த வாசகம் கூறி, மேல் வான்வழிப் போனான். 6.37.202

கவிக்கூற்று

இன்று இசைக்கு இடமாய இராகவன்
தனெ் திசைக் கருமச் செயல் செப்பினாம்;
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம். 6.37.203

நந்தியம்பதியில் பரதன் (10300-10304)

நந்தியம் பதியின் தலை நாள் தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம் முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 6.37.204


துன்பு உருக்கவும் சுற்றி உருக்கொணா
என்பு உருக்கும் தகைமையின் ஈட்டத்தான்
முன்பு உருக்கொண்டு ஒருவழி முற்றுறா
அன்பு உருக்கொண்டது ஆம் எனல் ஆகுவான். 6.37.205

நினைக்கவும் தடங்கண் இணை நீர்வர
இனத்த தண்டலை நாட்டிருந்தேயும் அக்
கனத்த கந்தமும் காயும் கனிகளும்
வனத்த அல்ல அருந்தலில் வாழ்க்கையான். 6.37.206

நோக்கின் தனெ்திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று ஏக்குற்று, ‘இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும் ‘என்று உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; 6.37.207

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திருமுடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி
கண்ணின் நீர்க்கு ஒர் கரை எங்கும் காண்கிலான். 6.37.208

பரதன் இராமன் வருநாளை நினைத்தல்

அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை நினைத்தனன் ஆம் அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்தநாள். 6.37.209

இராமன் வரவேண்டிய நாள் இன்றுதான் என்று சோதிடர் பரதனுக்குக் கூறுதல்

யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த்தரு கென்ன, வந்து எய்தினார்,
‘ஆண்தகைக்கு இன்று அவதி ‘என்றார் அரோ. 6.37.210

குறித்த நாளில் இராமன் வாராமைக்கு வருந்திச் சிந்தித்தல் (10307-10311)
என்ற போதத்து இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்
கொன்ற போதத்து உயிர்ப்புக் குறைந்துளான். 6.37.211

மீட்டு எழுந்து விரிந்த செந்தாமரைக்
காட்டை வென்று எழுகண் கலுழிப்புனல்
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும் அவலத்து அழிந்தான் அரோ. 6.37.212

‘எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும்
தனைப் பயந்தவள் துன்பமும் தாங்கி அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும்பகை உண்டு ‘என விம்மினான். 6.37.213

மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில்
ஏவர் கிற்பர் எதிர்நிற்க என்னுடைச்
சேவகற்கு? என ஐயமும் தேறினான். 6.37.214

‘என்னை “இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின் அவன் அது கொள்க “ என்று
உன்னினான்கொல் உறுவது நோக்கினான்?
இன்னதே நலன் ‘என்று இருந்தான் அரோ. 6.37.215

பரதன் உயிர்துறக்க எண்ணுதல்.

‘அனைத்தும் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க : இவ் வையம் புகுதுக
நினைத்திருந்து நெடுந்துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரோடும் வாங்குவேன். 6.37.216

சத்துருக்கனை அழைத்தல்

என்னப் பன்னி ‘இளவலை என் உழைத்
துன்னச் சொல்லுதிர் ‘என்னலும் தூதர்போய்
‘உன்னைக் கூயினன் உம்முன் ‘எனா முனம்
முன்னர்ச் சென்றனன் மூவர்க்கும் பின் உளான். 6.37.217

வந்து சத்துருக்கனிடம் பரதன் வரம் வேண்டுதல்

தொழுது நின்ற தன் தம்பியைத் தோய்கணீர்
எழுது மார்பகத்து இறுகத் தழுவினான்
அழுது, ‘வேண்டுவது உண்டு ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று ‘என்றான். 6.37.218

“‘என்னது ஆகும்கொல் அவ் வரம்? ” என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது ‘என்றான். 6.37.219

கேட்ட சத்துருக்கன் வருந்திச் சொல்லுதல் (10316-10319)

கேட்ட தோன்றல் கிளர்தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்கா நின்றான். 6.37.220


விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, ‘நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்! ‘ என்று அரற்றினான்
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 6.37.221

கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக்
        காத்துப் பின்பு
போனானும் ஒருதம்பி; “போனவன்தான் வரும்
        அவதி போயிற்று “ என்னா
ஆனாத எரிபுக என்று அமைவானும் ஒருதம்பி;
        அயலே நாணாது,
யான் ஆம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ்
        அரசாட்சி! இனிதே அம்மா 6.37.222

“‘மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து
        வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல்நிற்கும் ‘‘ என்று அஞ்சி, புறத்து இருந்தும்
        அருந்தவமே தொடங்கினாயே!
“என்னின்பின் இவன் உளனாம் “ என்றே பின்
        அடிமையுனக்கு இருந்த தேனும்
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ்
        இருந்ததுவும் ஒக்கும் என்றான். 6.37.223

பரதன் சத்துருக்கனுக்கு அமைதி கூறி எரிவளர்க்கக் கட்டளையிடுதல்

முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழுவெள்ளிக்
        கொழுநிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, அவன் இங்குத் தாழ்க்கின்ற
        தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன் பின் இவ்வுலகை
        உலைய ஒட்டான்;
அத்திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு;
        எரிபோய் அமைக்க ‘என்றான் 6.37.224

இச்செய்தி யறிந்து கோசலை பரதனை விலக்க விரைந்து வருதல்

அப்பொழுதின் இவ் உரை சென்று, அயோத்தியினில்
        இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து,
        அலமந்து ஏங்கி
‘இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து
        ஒழிந்தால், மகனே! ‘என்னா,
வெப்பு எழுதினால் அன்ன மெலிவுடையாள் கடிது ஓடி,
        விலக்க வந்தாள். 6.37.225

கோசலை பரதனை அடைதல்

மந்திரியர், தந்திரியர், வளநகரத்தவர்,
        மறையோர், மற்றும் சுற்றச்
சுந்தரியர் எனைப்பலரும் கைதலையில் பெய்து
        இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதலாய இமையவரும் முனிவரரும்
        இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை
        வந்து அடைந்தார் அன்றே. 6.37.226

எரிபுகும் பரதனைக் கோசலை பற்றிக் கொள்ளுதல்

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து
        வீழ்ந்து அசைய மேனி தள்ள,
எரியமைக்கும் மயானத்தை எய்துகின்ற காதலனை
        இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள்
        தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைந்த திருமனத்தான் அடிதொழுதான்; அவள்புகுந்து
        பற்றிக் கொண்டாள். 6.37.227

'‘மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும்
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும் எண்ணில் அப் பெற்றியால்;
என் இழைத்தனை என்மகனே? ‘என்றாள். 6.37.228

‘நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி
பாயும்; மன் அருஞ் சேனையும் பாயுமால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் விழும்; உலகும் திரியுமால். 6.37.229

‘தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம் கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை ஊழி திரியினும் பேருமோ? 6.37.230

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 6.37.231

'இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய் ‘என்றாள். 6.37.232

‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழிவாழ்
பெருநிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ? கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 6.37.233

“‘இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால்
பிறக்கையும் கடன் “ என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே! வலி ஆவதும்
துறக்கை தானும் என்றாள் மனம் தூய்மையாள். 6.37.234

கோசலையின் சொல்லைப் பரதன் மறுத்துரைத்தல் (10331-10333)

“‘மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் ” எனல்;
எந்தை மெய்ம்மையும் இக்குலச் செம்மையும்
நைந்து போக உயிர்நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பன் ஆல். 6.37.235

‘யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்துபோய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கு இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? 6.37.236

தாய் சொல் கேட்டலும், தந்தைசொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன் இது, காட்டுவென், மாண்டு என்றான். 6.37.237

பரதன் தீயினை நெருங்கி அதற்குப் பூசனை புரியும்போது அனுமன் வந்து தடுத்தல்

என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோர் உடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்று போல் நெடு மாருதி கூடினான். 6.37.238

அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? என்று உரைத்து உள்புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான். 6.37.239

அனுமன் பரதனுக்குக் கூறுவது (10336-10338)

ஆக்கி மற்று அவன் ஆய்மலர்த் தாள்களைத்
தாக்கத் தன்தலை தாழ்த்து வணங்கி கை
வாக்கின் கூடப் புதைத்து ‘ஒருமாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும் ‘எனச் சொல்லினான். 6.37.240

‘இன்னம் நாழிகை எண் ஐந்து உளது ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லை எனின் அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து இவ் எரியில் முடிவெனால். 6.37.241

ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்
நின்று தாழ்த்து அருள் நேமிச் சுடர் குணக்
குன்று தோன்றளவும்; இது குன்று மேல்
பொன்று நீ இவ் அனலினில் பொய்யிலாய். 6.37.242

பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்கநேர்ந்தமை கூறுதல்

‘எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ?
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால். 6.37.243

அனுமன் அடையாள மோதிரத்தைக் காட்டுதல்

‘அண்டர் நாதன் அருளின் அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோதறு சிந்தையாய்!
கண்டு கொண்டு அருள்வாய் ‘எனக் காட்டினான். 6.37.244

மோதிரம் வாங்கிய பரதன் மகிழ்ச்சி (10343-10348)

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்
ஊட்டிய வல்விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்ததாம் அரோ
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும். 6.37.245


அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை. 6.37.246

மோதிரம் வாங்கிய பரதன் மகிழ்ச்சி (10343-10348)

மோதிரம் வாங்கி தன்முகத்தின்மேல் அணைத்து
‘ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ? ‘எனா
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 6.37.247

ஆதி வெந்துயர் அல்லால் அருந்தல் இன்மையால்
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்
‘ஏதிலன் ஒருவன்கொல் ‘என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன வயிரத் தோள்களே. 6.37.248

அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும்; வெங் களி துளக்கலால்,
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக்கை கொட்டுமால். 6.37.249

‘ஆடுமின் ஆடுமின்! ‘என்னும்; ‘ஐயன்பால்
ஓடுமின் ஓடுமின்! ‘என்னும்; ‘ஓங்கு இசை
பாடுமின் பாடுமின்! ‘என்னும்; பாவிகாள்!
‘சூடுமின் சூடுமின் தூதன் தாள்! ‘எனும். 6.37.250

‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர் இனி ‘எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டலங்கள் கூடுற
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும் பாடுமால். 6.37.251

வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;
காதல் என்றதுவும் ஓர் கள்ளில் தோற்றிற்றே. 6.37.252

பரதன் அனுமனைப் பாராட்டி ‘‘நீயார்? ‘என வினவுதல(10349- 10350)

அத்திறத்து ஆண்தகை அனுமன் தன்னை ‘நீ
எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன் மூர்த்தியை
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் ‘என்றான். 6.37.253

மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை;
இறைவரில் ஒருவன் என்று எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்! “ என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான். 6.37.254

அனுமன் தன் வரலாற்றைக் கூறுதல்(10351-10352)

காற்றினுக்கு அரசன்பால் கவிக் குலத்தினுள்
நோற்றுளாள் வயிற்றின் வந்து உதித்து, நும்முனாற்கு
ஏற்றிலா அடித்தொழில் ஏவலாள் ஆனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 6.37.255

அனுமன் தன் பெருவடிவைக் காட்டுதல்

‘அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு ‘எனா
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முந்துவான். 6.37.256

அனுமனது பெருவடிவு கண்டோர் அதிசயமும் அச்சமும் அடைதல்

வெஞ்சிலை இருவரும் விரிஞ்சன் மைந்தனும்
‘எஞ்சல் இல் அதிசயம் இது’என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென
அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால். 6.37.257

பரதன் அனுமனது பெருவடிவைச் சுருக்கிக் கொள்ள வேண்டுதல்

‘ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியின் சூழ்வர
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து ‘என மன்னன் வேண்டினான். 6.37.258

அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்(10355-10356)

சுருக்கிய உருவனாத் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனுக்கு ஐயன் அன்பினால்
பொருக்கென நிதியமும் புனை பொன் பூண்களின்
வருக்கமும் வரம்பு இல நனி வழங்கினான். 6.37.259

கோவொடு தூசு நல் குல மணிக்குலம்
மாவொடு கரிக்குலம் வாவு தேர் இனம்
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்
ஏவரும் சிலை வலான் யாவும் நல்கினான். 6.37.260

இராமனை எதிர்கொள்ள நகர மக்களைப் புறப்படச் செய்யுமாறு பரதன் சத்துருக்கனிடம் சொல்லுதல்

இளவலை, “‘அண்ணலுக்கு எதிர் கொள்க “ என்று, நம்
வளைமதில் அயோத்தியில் வாழும் மக்களை,
“கிளையொடும் ஏகு “ எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் ‘என்றான். 6.37.261

நகரை அணிசெய்கென மக்களுக்குச் செப்புமாறு சத்துருக்கனுக்குப் பரதன் கூறுதல் (10358-10359)

“‘தோரணம் நட்டு மேல்துகில் பொதிந்து நல்
பூரணப் பொற்குடம் பொலிய வைத்து நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீரணி அணிக! “ எனச் செப்புவாய் ‘என்றான். 6.37.262


‘பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம்பொன் நீள்
சிரத்தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத்தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய் ‘என்றான் 6.37.263

சத்துருக்கன் பரதனது கட்டளையைச் சுமந்திரனுக்கு அறிவித்தல்

என்றலும் அவனடி இறைஞ்சி ஏகி, அக்
குன்று உறழ் வரிசிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்,
தன்துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 6.37.264

சுமந்திரன் வள்ளுவர்க்குக் கட்டளையிடுதல்

அவ்வுரை கேட்டலும் அறிவின் வேலையான்
கவ்வை இல் அன்பினில் களிக்கும் சிந்தையான்
‘வெவ் வெயில் புரைமணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று அறை பறை எற்றுக ‘என்றிட. 6.37.265

வள்ளுவன் முரசறைதல்

‘வானையும் திசையையும் கடந்த வான்புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மாநகர்த்
தானையும் அரசரும் எழுகதான் ‘என
யானையில் வள்ளுவர் முரசம் எற்றினார். 6.37.266

முரசொலி கேட்ட நகர மக்கள் ஆரவாரித்துக் கொண்டு புறப்படுதல்

முரைசொலி கேட்டலும் முழங்கு மாநகர்
அரைசரும் மாந்தரும் அந்தணாளரும்
கரைசெயல் அரியதோர் உவகை கைதர
திரை செறி கடல் என எழுந்து சென்றதால். 6.37.267

அம்முரசொலியின் சிறப்பு

‘அனகனை எதிர்கொள்க ‘என்று, அறைந்த பேரி, நல்
கனகம் நல்கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனைகடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 6.37.268

அறுபதினாயிரம் அக்குரோணி சேனையும் நகரமாந்தரும் இராமனை வரவேற்க மகிழ்ச்சியோடு போதல்

அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும்
செறிநகர் மாந்தரும் தரெிவை மார்களும்
உறுபொருள் எதிர்ந்தனெ உவந்து போயினார். 6.37.269

தாயர் மூவரும் சிவிகையிற் செல்லப் பரதன் அனுமனது கையைப் பற்றிச் செல்லுதல்

அன்னையர் மூவரும் அமரர் போற்றிட
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்
தன் நிகர் முனிவனும் தமருஞ் சூழ்தர
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 6.37.270

பரதன் இராமனது பாதுகைகளையே மகுடமாகச் சூடிக்கொண்டு செல்லுதல்

திருவடி இரண்டுமே செம்பொன் மௌலியா
இருபுறம் சாமரை இரட்ட ஏழ்கடல்
வெருவரும் முழக்கு என வேதம் ஆர்த்து எழ
பொரு அரு வெண்குடை நிழற்றப் போயினான். 6.37.271

சூரியன் மறைதல்

எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை
வில்லியை எதிர்கொள பரதன் மீச்செல்வான்
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 6.37.272

இராமன் காட்டில் தங்கிச் செய்த செயல்களைப் பற்றிக் கூறுமாறு அனுமனைப் பரதன் வேண்டுதல்

அவ்வழி மாருதி அம்கை பற்றிய
செவ்வழி உள்ளத்தான் ‘திருவின் நாயகன்
செவ்வழி உறைந்த அச்செயல் எலாம் விரித்து
இவ்வழி எமக்கு நீ இயம்புவாய் ‘என்றான். 6.37.273

அனுமன் இராமனது செயல்களைச் சொல்லுதல் (10370-10397)

என்றலும் மாருதி தொழுது ‘இங்கு எம்பிரான்
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மாநகர்
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ? 6.37.274

சித்திர கூடத்தைத் தீர்ந்த பின் சிரம்
பத்துடையவனுடன் விளைத்த பண்பெலாம்
இத்தலை அடைந்ததே இறுதியாம் என
வித்தகத் தூதனும் விரிக்குஞ் சிந்தையான். 6.37.275

விராதன் வதை

‘குன்று உறழ் வரிசிலைக் குரிசில் எம்பிரான்
தனெ்றிசைச் சித்திர கூடம் தீர்ந்தபின்
வன்திறல் விராதனை மடித்து மாதவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 6.37.276

தண்டக வனத்துத் தங்குதல்

‘ஆங்கு உறை தபோதனர், “அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்! ‘‘ என,
தீங்கு செய்தவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத்துயர், வாய்மையால் ‘என்றான். 6.37.277

அகத்திய முனிவர் வரவேற்பு

‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி அப்புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ்முனி வனத்தை நண்ணினான்
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 6.37.278

அகத்தியன் வில் முதலியன கொடுத்தல்

குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடம் கணான்தனை எதிர் தழுவி சாபமும்
கடுங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று
இடம்படு சுரிகையும் சேர ஈந்தனன். 6.37.279

சடாயுவைக் கண்டு பஞ்சவடி யடைதல்

அப்புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப்புகழ்த் தம்பியும் வீரன் தானும் போய்
மைப் பொழில் துறு பஞ்சவடியின் வைகினார். 6.37.280

சூர்ப்பணகை மூக்கறுபடல்

.பல்பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்கிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள். 6.37.281

கரதூடணர் வதை

‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ்சேனையோடும்
விரவினர்; ஐயன் செங்கை வில்லினை நோக்கு முன்பு ஓர்
எரிதவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும் இலங்கை புக்காள். 6.37.282

இராவணன் சீதையைக் கவர்தல்

‘இருபது தடக்கையான்மாட்டு இசைத்தலும் எழுந்து, பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தருபதம் சமைந்த முக்கோல் தாபத வடிவங் கொண்டு
திருவினை நிலத்தொடு ஏந்தி, தனெ்திசை இலங்கை புக்கான 6.37.283

இறக்கும் நிலையிலுள்ள சடாயுவை இராமன் காண்டல்

போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று, இளவலோடு
பாகின்ற சீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 6.37.284

கவந்தனை வதைத்துச் சவரிபூசனையைக் கொள்ளுதல்

‘அன்னவன் தனக்கு வேண்டும் அருங்கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தனெ்திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 6.37.285

வாலிவதை

ஆங்கு அவள்தனது சொல்லால், அருக்கன்மா மகனை அண்மிப்
பாங்குற நட்டு, “வாலி பருவரல் கெடுப்பேன் “ என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான். 6.37.286

மாரிக்காலத்திற்குப் பின் சுக்கிரீவன் சேனையோடு இராமனை அடைதல்

‘கால மா மாரி நீங்க, கவயனோடு இடபன், காந்து
நீலன், மாமயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மாமைந்தன், என்றிவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான். 6.37.287

சுக்கிரீவன் வானர சேனைக்குக் கட்டளையிடுதல்

‘எழுபது வெள்ளத்து உற்ற குரங்கினம் எழுந்து பொங்கி,
அழுவநீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன் திருவை நாடி. 6.37.286

சீதையைக்கண்டு சொன்னதும் வானரப்படை தனெ்கடற் கரையில்வந்து தங்குதல்

தனெ்திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும்
வன்திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்குத் திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும்படை இறுத்தது அன்றே 6.37.289

‘அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறிபுயத்து அரக்கன் தம்பி, “திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன நின் வாழ்நாள் ‘‘ என்றுநின்று உரைப்பச் சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 6.37.290

வருணன் அடைக்கலம்

'ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பரிவு இலாமை
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனம் சேப்ப,
ஓங்குநீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 6.37.291

சேது கட்டி இலங்கை புகுதல்

‘மற்று அவன் அவயம் என்ன மலர்ச்சரண் அடைந்த வேலை
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 6.37.292

இராவண வதம்

‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒருபத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலைத் தொழில் அரக்கராயோர் குலத்தொடும் தலத்து வீழ
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான். 6.37.293

இந்திரசித்து வதை

'இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்கரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்
அலக்கண் உண்டு உழலும் தேவர் அலர்மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற்குறை ஆடல் கண்டார். 6.37.294

மாண்ட அரக்கர்க்கு வீடணனை இறுதிக்கடன் செய்யச் செய்தல்

‘தேவரும் முனிவர் தாமும், சித்தரும் தரெிவை மாரும்
மூவகை உலகு உேளாரும், முறைமுறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, “மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் “ என்றான். 6.37.295

இராமன் சீதையைச் சினந்துபின் தணிதல்

‘நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறித்
தேன்முகம் மலரும் தாரான் அரிசொலச் சீற்றம் தீர்ந்தான். 6.37.296

தயரதன் வருகையும் வரமருளுதலும்

‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்து எய்த,
அய்யனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கய்யினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க்கலசம் ஆட்டி,
“செய்வரம் அருளுக “ என்றான்; திருவின் நாயகனும் கொண்டான். 6.37.297

வரங்கொடுத்துத் தயரதனும் அமரரும் செல்லுதல்

“என்னை, ‘நன் கருணை தன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக ‘‘ என அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வரழ்வு கூர,
பொன்நெடு நாட்டில் உள்ளார் வரம்பல வழங்கிப் போனார். 6.37.298

வீடணன் விமானம் ஈதல்

‘வெள்ளம் ஓர் ஏழுபத்தும், விலக்கரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல்தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான்
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன் இலங்கை வேந்தன். 6.37.299

இராமன் துணைவரோடு விமானத்தில் ஏறிப் பரத்துவன் ஆசிரமத்தையடைதல்

'ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும் தொல்லைத் துணைவரும் இலங்கை வேந்தும்,
பேரியல் படையும் சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறிப் பரத்துவன் இருக்கை சேர்ந்தான 6.37.300

அனுமன் தன்னை ஆழிகொடுத்து இராமன் அனுப்பியதைக் கூறியது

‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி “ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி ‘‘ என்று துரந்தனன், தோன்றல் ‘என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் முதுநீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 6.37.301

பரதன் தன்னிலை நினைந்து இரங்குதல்

காலின்மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்ட கொண்ட
நீல மா முகில்பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழுடைத்து, அடிமை மன்னோ. 6.37.302

பரதன் அனுமனது கைபற்றிக்கொண்டு கங்கையைக் சார்தல்

என்று அவன் இரங்கி ஏங்கி, இருகணும் அருவி சோர
வன்திறல் அனுமன் செங்கை வலக்கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளின் ஊடு, செறிபுனல் கங்கை சேர்ந்தான்
குன்றினை வலஞ்செய் தேரான் குணகடல் தோன்றும் முன்னர். 6.37.303

சூரியன் உதித்தல்

இராவணன் வேட்டம்போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவின் தையலும் மகிழச் சூடும்
அராவுபொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி குணபால் அண்ணல்
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான். 6.37.304

இராமன் வருகையில் ஐயங்கொண்டு பரதன் அனுமனை வினவுதல் (10401-10403)

காலைவந்து இறுத்த பின்னர்க் கடன்முறை கமலக் கண்ணன்
கோலநீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி
சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன்தன் மொழிக்கு எதிர்மொழியும் உண்டோ? 6.37.305

‘எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன்
முழுமுதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவநீர் வேலை அன்ன அரவம் இன்று ஆக வற்றோ?
விழுமிது, “எம்பிரான் வந்தான் “ என்று உரைத்தது, வீர! என்றான். 6.37.306

‘ஓசனை இரண்டே உள்ள, பரத்துவன் உறையுஞ் சோலை;
வீசுதணெ் திரையிற்று ஆய வெள்ளமோர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம்கோன் எங்குளன், பெரும! ‘என்றான். 6.37.307

அனுமான் கூறிய விடை (10404-10405)

பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர்சால்
விரத மாதவத்து மிக்கோய்! விண்ணுேளார் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளித்த அந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது தானை என்றான் 6.37.308

‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக்குலம் அவற்றை மாந்தி
ஆனனம் மலர்ந்தது இல்லை யாகும் : நீ துயரல், எந்தாய்! 6.37.309

‘இனி ஒரு கணத்தின், எம்கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனிவரும் கண்ணின் நீயே பார்த்தி ‘என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனிசிலைக் குருசில், செய்தது இற்று எனக் குணிக்கல் உற்றாம். 6.37.310

குகன் வருதல்

அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந்தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின், வேலை போலும்
பெருந்தடந் தானையோடும், கிராதர்கோன் பெயர்ந்து வந்தான். 6.37.311

இராமன் குகனைத் தழுவிக்கொள்ளுதல்

தொழுதனன்; மனமுங் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழுவிலர், வலியர் அன்றோ, மக்களும் மனையும்? ‘என்றான். 6.37.312

குகன் கூறும் விடை

'அருள் உனது உளது, நாயேற்கு; அவரெலாம் அரிய ஆய
பொருளலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தரெுள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள்தரும் மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? ‘ 6.37.313

குகன் இலக்குவனையும் சீதையையும் வணங்குதல்

ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னோ; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி ‘என்ன, புளிஞர்கோன் இளவல் பொன்தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரைமலர்த் தாளின் வீழ்ந்தான் 6.37.314

குகனை மற்றவர்கட்கு இராமன் அறிமுகப்படுத்தல்

தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முதுநீர்க் கங்கை
தழுவு இருகரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லன்
வழுவு இலா எயினர் வேந்தன்; குகனெனும் வள்ளல் என்றான் 6.37.315

சூரியன் மறைதல்

அண்ணல் அஃது உரைத்தலோடும், அரிக்குலது அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிதுறத் தழுவி, நட்டார்
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல
வண்ணமால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான். 6.37.316

அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போல
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 6.37.317

இராமன் சீதையோடும் சேனையோடும் விமானத்தில் செல்லுதல்

கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து இளவலோடும்
அதிர்பொலன் கழலினான் அவ் அருந்தவன் தன்னை ஏத்தி,
விதிதரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர்தரு சேனை யோடும் முனிமனம் தொடரப் போனான். 6.37.318

விமானத்திலுள்ேளார்க்கு அயோத்தி நகரின் மதில் தோன்றுதல்

தாவி வான் படர்ந்து மானம் தடை இலது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவிவி,
ஓவியம் உயிர் பெற்றென்ன, உம்பர் கோன்நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 6.37.319

பொன்மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன்மதிக் கிழவர் தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல்மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று ‘
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார். 6.37.320

புட்பகவிமானம் தரையிலுள்ள அனுமன் முதலியோர்க்குத் தோன்றுதல்

அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினால் என
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினான். 6.37.321

அனுமன் பரதனுக்கு இராமனைக் காட்டிக் கூறுதல (10418 - 10419)

‘அண்ணலே! காண்டியால் அலர்ந்த தாமரைக்
கண்ணனும் வானரக் கடலும் கற்புடைப்
பெண் அருங் கலமும் நின் பின்பு தோன்றிய
வண்ணவில் குமரனும் வருகின்றார்களை. 6.37.322

‘ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ்புறம் கிடக்குறு படியது ஆயது ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்.
ஊழியோன் ‘என்று கொண்டு உணர்த்தும் காலையே. 6.37.323

இராமனை எதிர்கொள்வோர் ஆர்ப்பு

பொனொளி மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மினொளி மேகம்போல் வீரன் தோன்றலும்,
மன் எதிர் வருநர்கள் ஆர்ப்பு, இராவணன்
தனெ்நகர்க்கு அப்புறத்து அளவும் சென்றதால். 6.37.324

பரதன் இராமனைக் காணுதல்

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென
கானிடைப் போகிய கமலக் கண்ணனை
தானுடை உயிரினை தம்பி நோக்கினான். 6.37.325

கெட்ட வான்பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம்
பட்ட வான்படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன் மானவன் தொழுதல் உன்னியே
விட்டனன் மாருதி கரத்தை மேன்மையான் 6.37.326

அனுமன் விமானத்திலுள்ள இராமன் முன் நிற்றல்

அக்கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்
உக்குறு கண்ணநீர் ஒழுகும் மார்பினான். 6.37.327

அனுமன் பரதனுக்குத் தரெிவித்ததை இராமனிடம் சொல்லுதல்

உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கல் உற்ற இப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின உலகம் யாவையும். 6.37.328

இராமன் அனுமனைப் பாராட்டுதல்

தீவினை யாம் பல செய்யத் தீர்வு இலா
வீ வினை முறை முறை விளைவ மெய்ம்மையால்;
நீ அவை துடைத்து நின்று அளிக்க நேர்ந்ததால்
யாயினும் அன்பினாய்! யாம் செய் மாதவம். 6.37.329

இராமன் அனுமனைத் தழுவுதல்

என்று உரைத்து அனுமனை இறுகப் புல்லினான்,
‘ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும்? ‘என்றனன்
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 6.37.330

பரதன் தோன்றுதல்

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன் தொழுத கையினன்
ஊடு உயிருண்டு என உலர்ந்த யாக்கையன்
பாடு உறு பெரும்புகழ்ப் பரதன் தோன்றினான். 6.37.331

அனுமன், விமானத்துள் அமர்ந்திருக்கும் இராமனுக்குப் பரதனைக் காட்டுதல்

தோன்றிய பரதனைத் தொழுது தொல் அறச்
சான்று என நின்ற நின் இளைய தம்பியை
வான்தொடர் பேரரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனைக் காண்டி ஈண்டு ‘எனா. 6.37.332

இராமன் பரதனைக் காண்டல்

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தரெியலான் நிலைமை சொல்லுங்கால்
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 6.37.333

விமானம் நிலத்தைச்சேர்தல்

அவ்வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி
தவ்வல் இல் ஆறுபத்தாயிரமோடும் தாயரோடும்,
இவ்வயின் அடைந்து உேளாரைக் காண்பென் ‘என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது அவ் விமானம் தானும். 6.37.334

நிலத்தைச் சேர்ந்த விமானத்தைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி

எவ்வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும்,
அவ் அவர்க்கு அணுகிய அமரர்நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால். 6.37.335

இராமனைக் கண்ட தாயர் முதலியோர் நிலை (10432-10435)

தாயாருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையர்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஒத்தான்;
ஓய்வுற உலந்த யாக்கைக்கு உயிர்புகுந்தாலும் ஒத்தான். 6.37.336


எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளிவரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும்பத அமுதம் ஒத்தான்;
ஒளிவு அறப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்கு,
தெளிவரு களிப்புச் செய்யும் தேம்பிழித் தேறல் ஒத்தான். 6.37.337

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கவன்று வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும் வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர் உணர்வு பெற்றார். 6.37.338

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரிவளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலினமா விலாழியும், எண் இல் யானை
வண்ணவார் மத முந்நீரும் மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 6.37.339

வசிட்டன் முதலியோர் விமானத்தில் ஏற இராமன் வசிட்டனை வணங்குதல்

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பி மாரும்,
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனைகழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 6.37.340

வசிட்டன் இராம இலக்குவரை வாழ்த்துதல்

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி,
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் முன்போல் வாழ்த்தினான் ஆசி கூறி. 6.37.341

இராமன் தாயரை வணங்குதல்

கய்கயன் தனையை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண்
அய்யனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம்தம்
செய்ய தாமரைக்கண் நீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 6.37.342

சீதையும் இலக்குவனும் வணங்குதல்

அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன்நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர் தங்கள்
பொன்னடித் தலத்தில் வீழத், தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி! ‘என்று ஆசி சொன்னார். 6.37.343

தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல் (10440-10441)

சேவடி இரண்டும் அன்பின் அடி உறை ஆகச் சேர்த்தி,
பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 6.37.344

தழுவினன் நின்ற காலை தத்திவீழ் அருவி காலும்
விழுமலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகற் செவ்வி
வழுவுற, பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்றுகாண் கறவை அன்னான். 6.37.345

இலக்குவன் பரதனைப் பணிதல்

அனையது ஒர் காலத்து, அம்பொன் சடைமுடி அடியது ஆக,
கனைகழல் அமரர் கோமாற் கட்டவன் படுத்த காளை
துனைபரி, கரி தேர், ஊர்தி என்றிவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரைமலர்த் தாளின் வீழ்ந்தான். 6.37.346

ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட
தாள்தொடு தடக்கை ஆரத் தழுவினன் ‘தனிமை நீங்கிக்
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது? ‘என்று உலகம் நைய. 6.37.347

சத்துருக்கன் வணக்கம்

மூவர்க்கும் இளைய வள்ளல் முடி மிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறிகழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்ல,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான். 6.37.348

இராமன் சத்துருக்கனைத் தழுவிக்கொண்டு தன் தம்பிமார்கட்குச் சுக்கிரீவன் முதலிய நண்பர்களை அறிமுகப்படுத்தல்

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத்தம்பி மாருக்கு
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 6.37.349

பரதன், சுக்கிரீவன் முதலியோரைப் பாராட்டுதல்

குரக்கினத்து அரசை, சேயை, குழுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத்திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி
மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன், நின்றான். 6.37.350

சுமந்திரன் இராமனை வரவேற்க வருதல்

மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 6.37.351

வந்த சுமந்திரனை இராமன் தழுவுதல்

அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர்செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்;
‘வழு இனி உளதன்று, இந்த மாநிலக் கிழத்திக்கு; என்றான். 6.37.352

இராமன் ஏவலின்படி வரவேற்க வந்த சேனையெல்லாம் விமானத்தில் ஏறி இராமனை வணங்குதல்

‘ஏறுக சேனை எல்லாம் விமான மீது ‘என்று தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இனைய வீரன் இணையடி தொழுதது அன்றே. 6.37.353

தேவர்கள் புட்பக விமானத்தைப்புகழ்ந்து பூமாரி பொழிதல்
‘உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரைசெயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரைசெறி அலங்கல் மாலைப் புட்பக விமானம் ‘என்று என்று,
உரைசெய்து வான் உேளார்கள் ஒண்மலர் தூவி ஆர்த்தார். 6.37.354

விமானத்துள் முரசமுதலியவற்றின் முழக்கம்

அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன,
விசியுறு முரசும், வேதத்து ஓதையும், விளிகொள் சங்கும்,
இசையுறு குழலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 6.37.355

விமானம் அயோத்திநோக்கிச் செல்லும் தோற்றம்

அவ்வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற; செகதல மடந்தையோடும்,
இவ்வுலகத்து உேளார்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 6.37.356

விமானம் நந்திக்கிராமத்தை யடைதல்

ஆனது ஓர் அளவையின் அமரர் கோனொடும்
வானவர் திருநகர் வருவதாம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 6.37.357
-------------

6.38 திரு முடி சூட்டுப் படலம் 10455 – 10496 (42)

இராமன் தம்பியருடன் மயிர்வினை முற்றி ஒப்பனை செய்தல்

நம்பி அப் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர்வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண்புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 6.38.1

அயோத்திக்குள் புக இராமன் தேர் ஏறுதல்

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம் பதியை நீங்கி
குருதி கொப்பளிக்கும் வேலோன் கொடிமதில் அயோத்தி மேவ
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பருமணித் தேரன் ஆனான். 6.38.2

தம்பியர் பணிசெய இராமன் தேர்மேற் செல்லுதல்

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான் 6.38.3

இராமன் தேரின் நாற்புறத்திலும் வீடணன் முதலோர் செல்லுதல்

வீடணன் குருசில் மற்றை வெங்கதிர்ச் சிறுவன் வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு போத,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலி சேய் தூசு செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 6.38.4

வானரத் தலைவர் போதல்

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற வனப்பர் உச்சி பிறங்கு வெண்குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6.38.5

பதினெட்டுத் தேயத்து வேந்தர் செல்லுதல்

எட்டு அமை ஈறு பத்தின் எழுதிரை வளாக வேந்தர்,
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம்பொன் தேரர்,
வட்டவெண் குடையர் வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ்சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 6.38.6

சீதை விமானமூர்ந்து செல்லுதல்

.வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண்தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூநிற விமானம் தன்மேல் மிதிலைநாட்டு அன்னம் போனாள். 6.38.7

கவிக்கூற்று -மலர்மாரியின் மிகுதி

தேவரும், முனிவர் தாமும், திசைதொறும் முறையின் சிந்த,
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கி,
கேவலம் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 6.38.8

யானைகள் மதம் சொரிதல்

கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணைமுகப் பரும யானை,
காடு உறைந்து அண்ணல் எய்தக் கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ளக் களிதிறந்து உடைந்ததே போல். 6.38.9

குதிரைகள் ஆலித்தல்

துரகத் தார்ப் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன ஆலித்த; மரங்கள் ஆன்று,
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகைவிற் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன்நிறப் பசலை பூத்த. 6.38.10

இராமன் அயோத்தியில் அரண்மனை புகுதல்

ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கித் தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி நானிலக் கிழத்தியோடும்
சேய் ஒளிக் கமலத்தாளும் திருநடம் செய்யக் கண்டான். 6.38.11

நகர மக்களின் மகிழ்ச்சி (10465-10466)

‘வாங்குதும் துகில்கள் ‘என்னும் மனம் இலர் எனினும் பல்கால்
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேல் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்த, உடையிலாதாரை ஒத்தார் 6.38.12


வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வேறு
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பரிந்து சுற்ற,
வாச மென் கலவை சாந்து என்று இனையன, மயக்கம் தன்னால்,
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துேளாரும் 6.38.13

மகளிர் அணிகலன் பூண்டு அழகொடு தோன்றுதல்

இறைப்பெருஞ் செல்வம் நீத்த ஏழ் இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக்கொழுந்து அனைய நெற்றிப் பெய்வளை மகளிர், மெய்யை
மறைந்தனர் பூணின், மைந்தர் மனங்களின் மறுக்கம் கொள்ள. 6.38.14

விண்ணவர் மணமும் மண்ணவர் மணமும் தலை தடுமாறல்

விண் உறைவோர்தம் தயெ்வ வெறியொடு, வேறு உேளார் தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலை தடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும், வான் உறை மடந்தைமார்க்கும்,
உள்நிறைந்து உயிர்ப்பு வீங்கி ஊடல் உண்டாயிற்று அன்றே. 6.38.15

அரண்மனை நலங்களை வீடணன் முதலானோர்க்குக் காட்டுமாறு பரதனுக்கு இராமன் கூறுதல்

ஆயது ஓர் அளவில் ஐயன், பரதனை அருளின் நோக்கி,
‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரங்களாய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தரெித்தி ‘என்றான் 6.38.16

பரதன் அவ்வாறே நாயகக் கோயில் புகுதல்

என்றலும் இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தயெ்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 6.38.17

நாயகக் கோயிலைக் கண்டவர்கள் வியப்புறுதல்

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம் முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசல் ஆட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார 6.38.18

பரதன் அந்த அரண்மனையின் வரலாற்றைக் கூறுதல்

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்குக் காதல்
புண்டரீகத்து வைகும் புராதனன், கன்னல் தோளான்,
கொண்டநல் தவம் தன்னாலே உவந்து, முன் கொடுத்தது என்றான். 6.38.19

‘பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மைத்து
இங்கு இது, மலராள் வைகும் மாடம் ‘ என்று இசைத்த போதில்,
‘எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ ‘என்று கூறி
செங்கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 6.38.20

சுக்கிரீவன் பரதனை வணங்கி இராமனது முடிசூட்டு விழாவைப் பற்றி வினவுதல்

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி;
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, ‘தூயோய்!
கருந்தட முகில் அன்னாற்குக் காப்பு நாண் அணியும் நன்னாள்
தரெிந்திடாது இருத்தல் என்னோ? ‘ என்றலும், அண்ணல் செப்பும். 6.38.21

தீர்த்தநீர் கொணர அனுமன் விரைதல்

‘ஏழ்கடல் அதனில் தோயம், இருநதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்தோர் தன்மைத்து ‘என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ்புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 6.38.22

வசிட்டன் வர அனைவரும் அவனை வணங்குதல்

‘கோமுனியோடு மற்றைக் கணிதரைக் கொணர்க! ‘என்னா
ஏவினன்; தேர்வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மாதவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி இணையடி தொழுது நின்றார 6.38.23

வசிட்டன் : ஆராய்ந்து, இராமன் காப்பு நாண் அணியும் நாள் நாளைக்கு எனல்

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, ‘பெருநிலக் கிழத்தியோடும்
உரியமா மலராேளாடும் உகந்தனன் ஒருவு இல் செல்வம்
கரியவன் துய்த்தற்கு ஏய்ந்த காப்பு நாண் நாளை ‘என்றான். 6.38.24

இராமனது முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு விடுதல்

இந்திரன் குருவும், அன்னாற்கு ஏய்ந்தவர் எனவும், நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்,
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும், தூக்கி. 6.38.25

இராமன் முடிசூட்டு விழாவிற்கு மூவுலகத்தோரும் அயோத்தி அடைதல்

.அடுக்கிய உலகம் மூன்றும் ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒருபேரும் இன்றி அயோத்திவந்து இறுத்தது என்றால்,
தொடுக்குறு கவியான் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ? 6.38.26

வசிட்ட முனிவன் முதலியோர் இராமனை அணுகி முடிசூடும் நாள் நாளை என்பதை அறிவித்தல் 10480-10481

அவ்வயின் முனிவனோடும் பரதனும், அரியின் வேந்தும்
செவ்வியல் நிருதர் கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார் 6.38.27

நாளைநீ மவுலி சூடும் நலம் திகழ் பெரிய நல் நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக! ‘என்று,
வேளையே பொடியது ஆக விழிக்கும் நீள் நுதலின் வெண்பூம்
பூளையே சூடு வானைப் பொருவும் மாமுனியும் போனான். 6.38.28

மயன் மண்டபம் அமைத்தல்

நன்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல்முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கும் நெஞ்சன்,
கோன்முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும்
மான்முகத்து ஒருவன் நல்நாள் மண்டபம் வயங்கக் கண்டான். 6.38.29

அனுமன் எழுகடல் நீரைக் கொணர்தல்

சூழ்கடல் நான்கின் தோயம் எழுவகைத்தாகச் சொன்ன
ஆழ்திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று ‘என்ன, ஆம் என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ்கடல் நீரும் தந்தான், இருந்து உய்ய மருந்து தந்தான். 6.38.30

வேந்தர்கள் சரயுநதியின் புனலை யானைமேற் கொணர்தல்

எரிமணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரிமதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரைமணிக் காளம் ஆர்ப்ப, பல் இயம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 6.38.31

பளிங்கு மாடத்திட்ட மாணிக்க பீடத்தில் இராமன் சீதையோடு அமர்தல்

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத்தின் கால்கள் சேர்த்தி,
ஆணிப் பொன் சுற்று முற்றி அழகு உறச் சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள்தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ. 6.38.32

இராமனுக்கு வேந்தர் அபிடேகம் செய்தல்

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல்வாய்ச்
சங்கினம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல் இயங்கள் ஆர்ப்ப, பூமழை பொழிய விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 6.38.33

மாதவர் முதலியோர் அபிடேகம் செய்தல்

மாதவர், மறைவலாளர், மந்திரக் கிழவர் மற்றும்
மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீர் ஆட்ட,
சோதியான் மகனும் மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும் பின் அபிடேகம் செய்தார். 6.38.34

அபிடேக நீரின் சிறப்பு

'அம்கண் வான் உலகம் தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந்நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நலநீர்
எங்கன் ஏற்று அன்னோன் வாழும்? ‘ என்றனர், புலவர் எல்லாம். 6.38.35

அபிடேகம் செய்துகொள்ளும் இராமன் சீதையோடிருந்த தோற்றம்

மரகதச் சயிலம் செந்தாமரை மலர்க் காடு பூத்து,
திரைகெழு கங்கை வீசும் திவலையான் நனைந்து, செய்ய
இருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 6.38.36

முடிசூட்டுவிழாவிற்கு வேண்டியவை வந்துசேர்தல்

தயெ்வநீர் ஆடற்கு ஒத்த செய்வினை வசிட்டன் செய்ய,
அய்யமில் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட
எய்தின இயன்ற பல்வேறு இந்திரற்கு இயன்ற என்ன. 6.38.37

இராமனுக்கு வசிட்டமுனிவன் திருமுடி சூட்டுதல்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. 6.38.38

இராமன் முடிசூடிக் கொள்ளுதல்

வெள்ளியும் பொன்னும் என்பார் விதிமுறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின குனிப்ப, மௌலி சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும், தயெ்வப் பூமியும், சேரும் தோளான். 6.38.39

இராமன் மணிமுடி சூடியதில் மக்களுக்குள்ள மகிழ்ச்சி

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திருநகர்த் தயெ்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை
ஒத்த மூவுலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தது அத் தாம மௌலி. 6.38.40

பூமி தேவியின் மகிழ்ச்சி

பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைய பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப்பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க்கை நீட்டி
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 6.38.41

இராமன் பரதனை இளவரசனாக்கி இன்புற்றிருத்தல்

விரதநூல் முனிவன் சொன்ன விதிநெறி வழாமை நோக்கி,
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மாமணி மகுடஞ் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தரெிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 6.38.42
-----------

6.39 விடை கொடுத்த படலம் 10498 -10535

சிவிகையின் இராமன் இருத்தல்

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும்பூரி சேர்த்தி,
மாமணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகை மீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 6.39.1

விரிகடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரிகதிர்க் கடவுள் தன்னை இனமணி மகுடம் ஏய்ப்பக்
கருமுகிற்கு அரசு செந்தாமரைமலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன் அயோத்தி வேந்தன். 6.39.2

இராமனுக்குக் கவரி வீசுதல்

மரகதச் சயில மீது வான் நிலாப் பாய்வது என்ன
இருகுழை இடறும் வேற்கண், இளமுலை, இளநலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தறெ்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த. 6.39.3

வெண்குடை நிழற்றும் காட்சி

உலகம் ஈர் ஏழும் தன்ன ஒளிநிலாப் பரப்ப வானில்
விலகி நின்று ஒளிரும் திங்கள் வெட்கி உள் கருப்புக் கொள்ள,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டு அழித்திட்ட கீர்த்தி
இலகிமேல் நிவந்தது என்ன எழு தனிக் குடை நிழற்ற. 6.39.4

வாத்தியங்கள் முழங்க மகளிர் நடம்புரிதல்

மங்கல கீதம்பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல் இயங்கள் ஆர்ப்ப, பொரும் கயல் கருங்கண், செவ்வாய்,
பங்கய முகத்தினார் கள் மயில்நடம் பயில மாதோ. 6.39.5

மன்னர்கள் அடிபணிதல்

திரைகடல் கதிரும் நாணச் செழுமணி மகுட கோடி
கரைதரெிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரைபொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 6.39.6

மந்திரக் கிழவர் முதலோர் சூழ இராமன் இருத்தல்

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ்வாய்த் தரெிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த காலை. 6.39.7

வானர வீரர்கேளாடு சுக்கிரீவன் வந்து வணங்குதல் (10503-10504)

மயிந்தன், மா துமிந்தன், கும்பன், அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண்தார்
நயம்தரெி ததிமுகன், கோகச முகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்து ஏழு கோடியாம் வீரரோடும். 6.39.8

வீடணன் வந்து வணங்குதல்

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் செய்ய
மான வாள் அரக்கரோடும் வந்து, அடிவணங்கிச் சூழ்ந்தான். 6.39.9

குகன் வந்து வணங்குதல்

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல்திரள் வயிரத் திண்தோள் கடுந்திறல் மடங்கல் அன்னான்,
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான். 6.39.10

வந்தவர்களை வள்ளல் இனிதிருக்கச் செய்தல்

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பின்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளிமுகக் கமலம் காட்ட,
அள்ளுறத் தழுவினான் போல் அகம் மகிழ்ந்து, இனிதின், நோக்கி,
‘எள்ளல் இல்லாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர் ‘என்றான். 6.39.11

அறிஞர் முதலிய பல்லோரும் இராமனைச் சுற்றியமர்தல்

நல்நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல்நெறி அறியும் நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல்நெறி தோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்ற மன்னோ. 6.39.12

அரசரும் பிறரும் இராமனோடு இருதிங்களை மகிழ்ச்சியாகக் கழித்தல்

தேம்படு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி சேர்ந்த
பாம்பு அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி
வாம்புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்று உேளாரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இருமதி இறந்தது அன்றே. 6.39.13

கவிக்கூற்று

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்றவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரிவில் கொண்ட
திருக்கிளர் மார்பினான் பின் செய்தது செப்பல் உற்றாம். 6.39.14

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும் நிறைத்து, மேல்மேல்,
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறைகழல் அரசர் தம்மை ‘வருக ‘என அருள, வந்தார். 6.39.15

அய்யனும் அவர்கள் தம்மை அகம்மகிழ்ந்து, அருளின் நோக்கி
வய்யகம், சிவிகை, தொங்கல், மாமணி மகுடம், பொன்பூண்,
கொய் உளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை இன்ன
மெயுறக் கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும் மன்னோ. 6.39.16

சுக்கிரீவனுக்கு இராமன் பரிசுகள் கொடுத்தல்

சம்பரன் தன்னை வென்று தயரதன் நின்ற காலத்து
உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும்
கொம்புடை மலையும் தேரும், குரகதக் குழுவும் தூசும்
அம்பரம் தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான். 6.39.17

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்த அதனை ஈந்தான்,
அங்கதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறைய கிற்பார். 6.39.18

பின்னரும் அவனுக்கும் ஐயன் பெருவிலை ஆரத்தோடும்
மன்னும் நுண்தூசும், மாவும், மதமலைக் குழுவும், ஈயா,
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி ‘என்றான். 6.39.19

அனுமனுக்குப் பரிசளித்தல் (10515-10517)

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லை; பைம்பூண்
போர் உதவிய திண்தோளால் பொருந்துறப் புல்லுக ‘என்றான். 6.39.20

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி
பொன்திணி வயிரப் பைம்பூண் ஆரமும், புனைமென் தூசும்
வன்திறல் கயமும், மாவும், வழங்கினன், வழங்கு சீரான். 6.39.21

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகந்து நோக்க,
பாமறைக் கிழத்தி ஈந்த பருமுத்த மாலை கைக்கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அன்னாள் இடர் அறிந்து உதவினாற்கே. 6.39.22

சாம்பவனுக்குப் பரிசளித்தல்

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள் மற்றும்
உந்தினன், எண்கின், வேந்தற்கு உலகம் முந்து உதவினானே. 6.39.23

நீலனுக்குப் பரிசு

நவமணிக் காழும், முத்து மாலையும், நலம்கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொற்பூண் உலப்பு இல பிறவும், ஒண்தார்க்
கவனவெம் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தடெுத்தவனுக்கு ஈந்தான். 6.39.24

சதவலிக்குப் பரிசு

.பதவலிச் சதங்கைப் பைந்தார்ப் பாய்பரி, பணைத்திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன்பூண், மாமணிக் கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலி தனக்குத் தந்தான் சதுமுகத்தவனைத் தந்தான். 6.39.25

கேசரிக்குப் பரிசு

பேச அரிது ஒருவர்க்கேயும் பெருவிலை இதனுக்கு; ஈதுக்
கோ, சரி இலது என்று எண்ணும் ஒளிமணிப் பூணும் தூசும்,
மூசு எரிக்கு உவமை வெம்மை மும்மதக் களிறும், மாவும்,
கேசரி தனக்குத் தந்தான் கிளர்மணி முழவுத் தோளான். 6.39.26

நளன் முதலியோர்க்குப் பரிசு

வளன் அணிகலனும், தூசும், மாமதக் களிறும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பு இல பிறவும் ஈந்தான்
குளன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 6.39.27

எழுபது வெள்ளம் சேனைக்கும் கருணை நோக்களித்தல்

அவ்வகை அறுபத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ்வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன் கருணை நோக்கம். 6.39.28

வீடணனுக்குப் பரிசு (10524-10525)

மின்னை ஏய் மௌலிச் செம் கண் வீடணப் புலவர் கோமான்
தன்னையே இனிது நோக்கி, ‘சராசரம் சுமந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர்; உளரேல், ஐய!
பொன்னையே இரும்பு நேரே பொருவென ஒக்கும் என்றான். 6.39.29

என்று உரைத்து, அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு
வன்திறல் களிறும், தேரும், வாசியும், மணிப்பொன் பூணும்,
பொன்திணி தூசும், வாசக் கலவையும், புதுமென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான் நாகணைத் துயிலில் தீர்ந்தான். 6.39.30

குகனுக்குப் பரிசு

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு? ‘என்னா,
கருங் கைம்மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 6.39.31

அனுமன் முதலியோர்க்கு விடைகொடுத்தல்

அனுமனை, வாலி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனைகழல் காலினானை, கருணையங் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது அது காவற்கு இன்று என் ஏவலின் ஏகும் ‘என்றான். 6.39.32

வீடணனுக்கு விடைகொடுத்தனுப்புதல்

இலங்கை வேந்தனுக்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நாடுறு நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏய செய்தல் கடன் ‘எனக் கருதிச் சூழ்ந்தார். 6.39.33

யாவரும் இராமன் முதலியோரை வலங்கொண்டு வணங்கி விடைபெற்றுச் செல்லுதல்

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மாதவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை வலங்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே,
சரதமா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 6.39.34

வீடணன் இலங்கை சேர்தல்

குகனைத்தன் பதியின் உய்த்து, குன்றினை வலம்செய் தேரோன்
மகனைத் தன்புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே எய்தி கனைகடல் இலங்கை புக்கான்
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே. 6.39.35

இராமன் அரசு புரிதல் (10531-10532)

அய்யனும் அவரை நீக்கி, அருள்செறி துணைவரோடும்
வய்யகம் முழுதும் செங்கோல் மனுநெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நய்யுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 6.39.36

உம்பரோடு இம்பர் காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான் ‘என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய,
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான்
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 6.39.37

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 6.39.38
------------

This file was last updated on 30 Jan. 2017
.